Tamilnadu

செல்போன் வாங்கி தராத கணவர்.. விபரீத முடிவெடுத்த மனைவி: சென்னையில் நடந்த சோக சம்பவம்!

சென்னை கொடுங்கையூர் மீனாம்பாள் சாலை பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் கிண்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.இவரது மனைவி பூர்ணிமா.

இந்த தம்பதிக்கு ஒரு வயதில் ஒரு பெண் குழந்தையும், பிறந்து மூன்று மாதங்களான மற்றொரு பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் கணவரிடம் பூர்ணிமா தனக்கு என்று தனியாக ஒரு செல்போன் வேண்டும் வாங்கி கொடுங்கள் எனக் கூறி வந்துள்ளார்.

ஆனால் கணவர் வாங்கி கொடுக்காமல் மறுத்து வந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அவர் தனக்கு செல்போனும் வாங்கி கொடுக்க மாட்டிறீங்க, குடும்ப செலவுக்குப் பணமும் தரமாட்டிறீங்க என வாக்குவாதம் செய்துள்ளார்.

இதில் கணவன் பூர்ணிமாவைக் கடுமையாகத் திட்டியுள்ளார். இதனால் மனவேதனை அடைந்த அவர் படுக்கை அறைக்குச் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலிஸார் அவரது உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து பூர்ணிமாவின் கணவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செல்போன் வாங்கி தராததால் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: கட்டுக்கட்டாகப் பணம்.. காவல்துறை அதிகாரியைச் சர்ச்சையில் சிக்க வைத்த செல்ஃபி புகைப்படம்!