Tamilnadu

மூளைச் சாவு அடைந்த கணவர்.. இருதயம், கண் உடல் உறுப்புகளைத் தானமாக வழங்கிய மனைவி!

தருமபுரி அருகே மணியம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும் ஸ்ரீ நிகேஷ், கவின் நிலவன் என இரண்டு மகன்களும் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த புதனன்று செந்தில் குமார் பள்ளி முடித்துவிட்டு மாலை வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர் நடைப்பயிற்சி சென்றுள்ளார். அப்போது இருசக்கர வாகனம் ஒன்று அவர் மீது மோதியது. இதில் செந்தில்குமார் படுகாயம் அடைந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த உறவினர்கள் அவரை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது.

இந்நிலையில், சிகிச்சை பெற்று வந்த செந்தில் குமார் மூளைச்சாவடைந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்குவது குறித்து மனைவி விஜயலட்சுமியிடம் கூறியுள்ளனர்.

இதையடுத்து கணவரின் உடல் உறுப்புகளைத் தானமாக வழங்க மனைவி முன்வந்தார். பின்னர் இருதயம், நுரையீரல், கிட்னி, கணையம், கண் உள்ளிட்ட முக்கிய உடல் உறுப்புகளை அறுவை சிகிச்சை மூலம் எடுத்துப் பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்து சென்னை, வேலூர், சேலம், கோயம்புத்தூர் உள்ளிட்ட மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். கண்களை மட்டும் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நிர்வாகம் பெற்றுக்கொண்டனர்.

Also Read: அசாம் : காவல்நிலையத்தில் சிறுமியின் ஆடையை களைந்து பாலியல் தொல்லை.. காவல் ஆய்வாளரின் செயலால் அதிர்ச்சி!