Tamilnadu

“காணாமல் போனது நீட் ரத்து தொடர்பான கடிதமல்ல.. ஒன்றிய அரசின் நிர்வாக நேர்மை..” - சு.வெ MP காட்டம் !

நீட் தேர்வால் ஏழை, எளித மக்களின் மருத்துவ கனவு பாலகுவதை உணர்ந்து ஆரம்பத்தில் இருந்தே தமிழ்நாடு நீட் தேர்வை எதிர்த்துவருகிறது. தமிழக மக்களின் இந்த உணர்வை புரிந்துகொண்டு திமுக ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வை ரத்து மசோதாவை சட்டமன்றத்தில் நிறைவேற்றியது. ஆனால், அதற்கு இன்னும் ஒப்புதல் அளிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இதனிடையே மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் நீட் தேர்வு தொடர்பாக குடியரசுத் தலைவர் எழுதிய கடிதம் எங்கு சென்றது என்றே தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,

"தமிழ்நாடு மாநில பொதுப் பள்ளிக்கான மேடை பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு அனுப்பிய கோரிக்கை விண்ணப்பத்தை இணைத்து நான் மாண்புமிகு குடியரசுத் தலைவருக்கு 19.01.2023 அன்று கடிதம் எழுதி இருந்தேன். அதில் 15 மாதங்களாக தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றிய நீட் மசோதா ஒப்புதல் தரப்படாமல் தாமதம் ஆவதையும், இதனால் லட்சக்கணக்கான தமிழ்நாடு பெற்றோர் மாணவர்கள் மன உளைச்சலுக்கும் வேதனைக்கும் ஆளாகி இருப்பதை சுட்டிக் காட்டி இருந்தேன். (கடித எண் H97/GOI/MP/Madurai/19.01.2023).

இதற்கு குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் இருந்து பதில் வந்தது. அதில் எனது கடிதம் உள்துறை அமைச்சகத்திற்கு மேல் நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டு இருந்தது. ( கடித எண் CII - 11001/1/2022- CA -II dated 02.03.2023). பொதுப்பள்ளிக்கான மேடையின் பொதுச்செயலாளர் திரு. பிரின்ஸ் கஜேந்திர பாபு உள் துறை அமைச்சகத்திடம் இருந்து பெற்றுள்ள தகவல் உரிமைச் சட்ட பதில் (RTI reply) அதிர்ச்சி அளிக்கிறது.

"24.12.2022 தேதியிட்ட கோரிக்கை விண்ணப்பத்தை இணைத்து 19.01.2023 அன்று திரு வெங்கடேசன் அளித்த கடிதம் தங்களின் கடிதத்தில் குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் இருந்து எங்கள் அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டு இருப்பதாக குறிப்பிட்டிருப்பது போல எங்களுக்கு அது வரப் பெறவில்லை." ( பார்வை: A/43020/01/2023- RTI - 897 dated 17.05.2023). என்று உள்துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது.

இந்த நாட்டின் நிர்வாக தலைமையகமான குடியரசுத்தலைவர் மாளிகை நாடாளுமன்ற உறுப்பினரின் கடிதத்தை மேல்நடவடிக்கைக்காக உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பியுள்ளதாக சொல்கிறது. ஆனால் உள்துறை அமைச்சகமோ அப்படியொரு கடிதம் வரவில்லை என்று சொல்கிறது.

தமிழ்நாடு மாணவர்களின் எதிர்காலம் குறித்த மிக முக்கியமான பிரச்சினையில் ஒன்றிய அரசுசார் நிர்வாகம் எவ்வளவு அலட்சியப்போக்கோடு நடந்து கொள்கிறது என்பதற்கு இது சிறந்த உதாரணம். காணாமல் போனது கடிதமல்ல, நிர்வாகத்தின் நேர்மை என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இன்று மாண்புமிகு குடியரசுத் தலைவருக்கு மீண்டும் ஒரு கடிதம் எழுதியுள்ளேன். உடனடியாக தலையிட்டு 21 மாதங்களாக நிலுவையில் உள்ள நீட் மசோதாவுக்கு விரைவில் ஒப்புதல் தர ஆவன செய்யுமாறு வேண்டியுள்ளேன்." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Also Read: “9 ஆண்டுகளாக வாயால் வடை சுடும் ஒன்றிய மோடி பாஜக அரசு..” - பட்டியலிட்டு முரசொலி கடும் விமர்சனம் !