Tamilnadu

வேலூரில் 2 ஏக்கர் பரப்பளவில் கலைஞர் நூற்றாண்டு தங்கும் விடுதி.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

சென்னை கிண்டியில் உள்ள கிங் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் ரூ.230 கோடியில் 1000 படுக்கை வசதிகளுடன் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையை இன்று மருத்துவர்கள், செவிலியர்களுடன் இணைந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

பின்னர் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "இருபது முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் தலைவர் கலைஞர் அவர்களை-டாக்டர் கலைஞர் என்று தான் அனைவரும் அழைப்பார்கள்.அவர் மெடிக்கல் டாக்டர் அல்ல, சோசியல் டாக்டர் - சமூக மருத்துவர் அவர்.

இந்த தமிழ்ச்சமுதாயத்தின் நோய்களைத் தீர்த்து குணப்படுத்த வந்த சமூக மருத்துவர் தான் தலைவர் கலைஞர் அவர்கள். தனது அறிவாற்றலை - சிந்தனைத் திறனை - மொழிஆழத்தை - செயல்வேகத்தை - துணிச்சலை வாழ்நாளின் 95 வயது வரையிலும் தமிழ்ச்சமுதாயத்தின் நன்மைக்காகவே பயன்படுத்தி வந்தவர் கலைஞர் அவர்கள். நான் கோட்டையில் இருந்தாலும் குடிசைகளைப் பற்றியே நினைப்பவன் என்று சொன்னவர் தலைவர் கலைஞர் அவர்கள்.

மிகமிக பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் பிறந்து ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலை மக்களுக்காக வாழ்நாள் முழுவதும் சேவையாற்றியவர் கலைஞர்.

அவர் பெயரால் அமைந்த நூலகத்தை அடுத்த மாதம் மதுரையில் திறக்க இருக்கிறோம். இன்றைய தினம் அவர் பெயரால் மருத்துவமனை திறக்கப்படுகிறது. அவர் பெயரை எந்தத் திட்டத்துக்கும் வைக்கலாம். அந்த வகையில் அனைத்துக்கும் பொருத்தமானவர் கலைஞர் அவர்கள்.

முதன்முதலாக ஆட்சிக்கு வந்த நேரத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 3 ஆம் நாள் தனது பிறந்தநாளை விளிம்பு நிலை மக்களுக்கான நாளாக மாற்றி அவர்களுக்கான திட்டங்களைத் தொடங்கும் நாட்களாக அதனைக் கொண்டாடியவர் கலைஞர் அவர்கள்.

* 1971 ஆம் ஆண்டு ஜூன் 3 இல் - பிச்சைக்காரர்கள் மறுவாழ்வுத் திட்டம் தொடங்கினார்.

* 1972 ஆம் ஆண்டு ஜூன் 3 இல் - கண்ணொளித் திட்டம் தொடங்கினார்.

* 1973 ஆம் ஆண்டு ஜூன் 3 இல் - கை ரிக்‌ஷாவுக்கு பதிலாக இலவச சைக்கிள் ரிக்‌ஷா வழங்கும் திட்டத்தை தொடங்கினார்.

* நாட்டிற்கே முன்மாதிரியான, ஏழை எளிய மக்களுக்கான ‘முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டம்' கலைஞரால் உருவாக்கப்பட்டது.

கலைஞர் அவர்கள் ஆட்சி காலத்தில் விழுப்புரம், திருவாரூர், தருமபுரி, தூத்துக்குடி ஆகிய இடங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் திறந்து வைத்தார்கள். மாவட்டத்துக்கு ஒரு மருத்துவக்கல்லூரி என்ற சிந்தனையை முதன்முதலாக விதைத்தவரும் தலைவர் கலைஞர் அவர்கள் தான்.

நான்கு குழந்தைகளுக்குத் தாயாக இருப்பவள், அதில் எந்தக் குழந்தை மெலிந்து இருக்கிறதோ அந்தக் குழந்தையையே அதிகம் கவனிப்பாள். அப்படி மெலிந்த குழந்தைகளைக் காக்கும் அரசு எமது அரசு' என்று தலைவர் கலைஞர் அவர்கள் சொல்வார்கள்.

அத்தகைய அரசு தான் இன்றைய திராவிட மாடல் அரசு ஆகும். இன்று உருவாக்கப்படும் மருத்துவமனையாக இருந்தாலும் - அடுத்த மாதம் திறக்கப்படும் நூலகமாக இருந்தாலும் இத்தகைய தாயுள்ளம் கொண்ட கலைஞரின் பேரால் அமைவதே பொறுத்தமானது.

இதனைத் திறந்து வைக்கும் வாய்ப்பு என்பது என் வாழ்நாளில் கிடைத்த மாபெரும் வாய்ப்பாகக் கருதுகிறேன். தமிழ்நாட்டின் முதலமைச்சராக மட்டுமல்ல - கலைஞரின் மகன் என்ற பூரிப்பு உணர்வோடு இதனைத் திறந்து வைத்திருக்கிறேன்.

வேலூர் மாவட்டத்தில் சி.எம்.சி உள்ளிட்ட மருத்துவமனைகளுக்குத் தமிழ்நாடு மட்டுமல்லாது வெளி மாநிலங்களிலிருந்தும் சிகிச்சைக்காக வருகின்றனர். இப்படி வருபவர்கள் தங்குவதற்குக் குறைந்த கட்டணத்தில் அறைகள் கிடைப்பதில்லை. இதுபற்றி தமிழ்நாடு அரசின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது.

இதனால் மருத்துவமனைக்கு வருபவர்கள் பயன்பெறும் வகையில் வேலூர் மாவட்டம் பெருமுகை கிராமத்தில் 2 ஏக்கர் பரப்பளவில் 250 படுக்கை வசதிகளுடன் கலைஞர் நூற்றாண்டு தங்கும் விடுதி கட்டித் தரப்படும்" என தெரிவித்துள்ளார்.

Also Read: ”கலைஞர் என்றாலே கிங் மேக்கர்”.. மருத்துவமனை திறப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!