Tamilnadu

போலிஸ் என கூறி மருத்துவ மாணவர் கடத்தல்.. மிரட்டி பணம் பறித்த 3 இளைஞர்கள் போலிசில் சிக்கியது எப்படி ?

சென்னை பல்லாவரம் அடுத்த பழைய பல்லாவரம் கார்டன் உட்டிராப் நகரில் வசித்து வருபவர் வினோத் வன ஈஸ்வர் (27). வெளிநாட்டில் மருத்துவ படிப்பு முடித்து, தற்போது இங்கு அடுத்த தேர்வுக்காக விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார். இந்த சூழலில் துரைப்பாக்கத்தை சேர்ந்த பயாஸ் என்பவர் இவருக்கு அறிமுகமாகியுள்ளார்.

இவர் மூலம் மெத்தம்பெட்டமைன் போதை பொருளை பெற்று வினோத் பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்த சூழலில் கடந்த 6-ம் தேதி இரவு அவர் தங்கியிருக்கும் விடுதிக்கு வந்த சங்கர், ஸ்ரீதர், சிவா, பாஸ்கர் ஆகிய 4 பேர் தங்களை போலீஸ் என கூறி வந்துள்ளனர். மேலும் வினோத் போதை பொருள் விற்பதாக கூறி அவரை தங்கள் காரில் ஏற்றியுள்ளனர்.

அப்படி ஏற்றிய அவர்கள் காவல்நிலையம் கொண்டு செல்லாமல், இரவு முழுவதும் காரிலேயே சுற்றி வந்துள்ளனர். அதுமட்டுமின்றி வினோத்தின் தந்தையை தொடர்பு கொண்ட அவர்கள், வினோத் போதை பொருள் விற்றதாக தாங்கள் சிறையில் அடைக்கப்போவதாகவும், அப்படி செய்ய வேண்டாம் என்றால் உடனே 8 லட்சம் பணம் வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

இதனால் பயந்துபோன அவரது தந்தை, தன்னிடம் இருந்த 98 ஆயிரம் ரூபாயை உடனே அந்த கும்பல் கூறிய வங்கி கணக்குக்கு அவர்கள் அனுப்பியுள்ளார். இதையடுத்து மறுநாள் மதியம் 3 மணியளவில் கடத்திய இடத்திலேயே வினோத்தை இறக்கி விட்டு செல்லும்போது, அவரிடம் இருந்த சவரன் தங்க செயின், 1 சவரன் மோதிரம், ஐ போன் உள்ளிட்டவற்றை பறித்து கொண்டு சென்றுள்ளனர்.

இதையடுத்து பாதிக்கப்பட்ட நபர் இந்த சம்பவம் குறித்து கடந்த 9-ம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். அப்போது இந்த வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டது பல்லாவரம் ரேடியல் சாலை அருகே சங்கர் (30), சிவா (28), பாஸ்கர் (26) ஸ்ரீதர் ஆகிய 4 பேர் என தெரியவந்தது.

இதையடுத்து அவர்களில் 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 80 ஆயிரம் ரூபாய் பணம், நகை, செல்போனை பறிமுதல் செய்தனர். பின்னர் கைதான மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தொடர்ந்து மீதம் இருக்கும் ஸ்ரீதரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Also Read: வீட்டுக் கழிவறையில் சடலமாக இருந்த புதிய தம்பதி.. விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்!