Tamilnadu
”அமலாக்கத்துறையை கொண்டு எதிர்கட்சிகளை மிரட்டும் பா.ஜ.க”: CPM செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆவேசம்!
ஒன்றிய அரசின் அமலாக்கத்துறையின் அராஜகம் என அமைச்சர் சந்தில் பாலாஜியின் கைது நடவடிக்கைக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வன்மையாக கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
ஒன்றிய பா.ஜ.க அரசு எதிர்க்கட்சி தலைவர்களை சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை போன்ற அமைப்புகளை பயன்படுத்தி பழிவாங்கும் நோக்கத்தோடு கைது செய்து சிறையில் அடைத்து வருவது நாடறிந்ததே. இதுவரை இந்த அமைப்புகளால் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில், 95 சதமான வழக்குகள் எதிர்க்கட்சிகள் மீது போடப்பட்ட வழக்குகளாகவே உள்ளன.
இதன் ஒரு பகுதியாக ஒன்றிய அமலாக்கத்துறையினர், தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜியை உள்நோக்கத்தோடு நள்ளிரவில் கைது செய்துள்ளனர். கடந்த சில தினங்களாக அவரது உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் சோதனை நடத்தியதோடு நேற்று காலை (13.06.2023) அவரது வீட்டிலும் சோதனை நடத்தியுள்ளனர்.
நேற்று மாலை தலைமை செயலகத்தில் உள்ள அமைச்சரது அலுவலகத்தில் துணை ராணுவப் படையினரை குவித்து சோதனை மேற்கொண்டுள்ளனர். இச்சோதனை குறித்து தலைமை செயலாளருக்கோ, முதலமைச்சருக்கோ குறைந்தபட்ச தகவல் கூட அளிக்கவில்லை. இதன் மூலம் மாநில அரசை புறக்கணித்தும், மதிக்காத வகையிலும் அமலாக்கத்துறை செயல்பட்டுள்ளது.
அமலாக்கத்துறை மேற்கொள்ளும் விசாரணைக்கு, தான் முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும், கேட்கும் ஆவணங்களை ஒப்படைக்க தயாராக உள்ளதாகவும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்த பின்னரும் சுமார் 8 மணி நேரம் அவரது வீட்டில் அவரை தனி அறையில் அடைத்து வைத்து நெருக்கடி கொடுத்துள்ளதோடு, நள்ளிரவில் அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.
இத்தனை பதற்றத்தோடு அமலாக்கத்துறை செயல்படுவது எதிர்க்கட்சியாக உள்ள திமுகவை பழிவாங்குவதாக உள்ளதுடன், மிரட்டி பணிய வைக்கும் நோக்கத்திலும் மேற்கொள்ளப்பட்டதாக உள்ளது. இத்தகைய அச்சுறுத்தும் அணுகுமுறையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வன்மையாக கண்டிக்கிறது.
மிரட்டல்கள் மூலம் பா.ஜ.க.வுக்கு எதிரான குரல்களை முடக்க நினைப்பது ஒருபோதும் ஏற்கத்தக்கதல்ல. மேலும், தமிழ்நாடு மக்களும் இதற்கு சரியான பதிலடி கொடுப்பார்கள் என்பது தெளிவு. ஒருவர் மீது புகார், குற்றச்சாட்டுக்கள் எழுமானால் அவரை விசாரணைக்கு உட்படுத்துவதற்கு சட்ட ரீதியான விதிமுறைகள் ஏற்கனவே வகுக்கப்பட்டுள்ளன. அதன்படி விசாரணை மேற்கொள்வதில் யாருக்கும் ஆட்சேபணை இருக்க முடியாது.
ஆனால், மோடி அரசு மேற்கொண்ட மூர்க்கத்தனமான சட்டத்திருத்தத்தை பயன்படுத்தி முறையான குற்றச்சாட்டுக்களையோ, செந்தில்பாலாஜி மீதான வழக்கு விபரங்களையோ விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென நோட்டீசோ வழங்காமல் அதிரடியாக கைது செய்திருப்பது ஜனநாயக கோட்பாடுகளுக்கு விரோதமானதாகும்.
இந்த கைது நடவடிக்கையை வன்மையாக கண்டிப்பதுடன் ஒன்றிய அரசின் பழிவாங்கும் நடவடிக்கையினை கண்டித்து வலுவான எதிர்ப்புக் குரல் எழுப்பிட வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் மாநில செயற்குழு அனைத்து ஜனநாயக சக்திகளுக்கும் வேண்டுகோள் விடுக்கிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!