Tamilnadu

முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா.. அமைச்சர்கள் தலைமையில் 12 குழுக்கள் அமைத்து முதல்வர் உத்தரவு !

ஐந்து முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவரும், 13 முறை சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, 13 முறையும் வெற்றி பெற்றவரும், தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும், தமிழ்நாட்டின் அரசியல் தலைவராக மட்டுமல்லாமல், இந்திய அரசியலின் திசையைத் தீர்மானிப்பவராகவும் திகழ்ந்த நூற்றாண்டு நாயகர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பன்முக ஆற்றலையும், அவர் படைத்தளித்த மக்கள் நலத் திட்டங்களையும் தமிழ்நாட்டின் வருங்காலத் தலைமுறையினர் என்றென்றும் நினைவில் போற்றும் வகையில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா மாநிலம் முழுவதும் சூன் 2023 திங்கள் முதல் சூன் 2024 திங்கள் வரை தமிழ்நாடு அரசால் கொண்டாட முடிவு செய்யப்பட்டது.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை தமிழ்நாடு அரசின் சார்பில் சிறப்பாக கொண்டாடுவது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் 22.5.2023 அன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நவீனத் தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பி 'தமிழினத் தலைவர்' கலைஞர் அவர்களை பெருமைப்படுத்தும் விழாக்களாக மட்டுமல்லாமல், அவர் தமிழ்நாட்டு மக்களின் நலனிற்காக அறிவித்து, நிறைவேற்றிய திட்டங்களை இளைய சமுதாயத்தினர் அறிந்து கொள்ளும் வகையில் இந்த விழாக்கள் அமைய வேண்டும் என்றும், மாதந்தோறும் ஒவ்வொரு பொருளின் அடிப்படையில் இந்த விழாக்களை நடத்திட வேண்டும் என்றும், பெரிய அளவிலான விழாக்களாக மட்டுமல்லாமல், அனைத்துத் தரப்பினரும் பங்கெடுக்கும் விழாக்களாக இவற்றை நடத்த வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும், அரசு நடத்துவதாக மட்டுமல்லாமல் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், மாணவர்கள், பெண்கள், அரசு ஊழியர்கள், பயனடைந்த மக்கள் ஆகியோர் இணைந்து கொண்டாடுவதாக அமைய வேண்டும் என்று தெரிவித்தார்.

அதன் தொடர்ச்சியாக, 2.6.2023 அன்று சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு இலச்சினையை வெளியிட்டு, அவர் தமிழ்நாட்டு மக்களின் நலனிற்காக ஆற்றிய பணிகள், நிறைவேற்றிய திட்டங்கள் குறித்த குறும்படத்தையும் வெளியிட்டார்.முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் பல்வேறு திறமைகள் கொண்ட பன்முக வித்தகர். அவர் தமிழ்நாட்டிற்கு ஆற்றிய அரும்பணிகளில் அவரின் பரிமாணங்களை போற்றும் வகையில் 12 குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.

1) இதழாளர் – கலைஞர்

2) எழுத்தாளர் – கலைஞர்

3) கலைஞர் - கலைஞர்

4) சமூக நீதிக் காவலர் - கலைஞர்

5) பண்பாட்டுப் பாசறை - கலைஞர்

6) ஏழைப் பங்காளர் - கலைஞர்

7) சட்டமன்ற நாயகர் - கலைஞர்

8) பகுத்தறிவு, சீர்திருத்தச் செம்மல் - கலைஞர்

9) நவீன தமிழ்நாட்டின் சிற்பி - கலைஞர்

10) நிறுவனங்களின் நாயகர் – கலைஞர்

11) தொலைநோக்குச் சிந்தனையாளர் - கலைஞர்

12) தமிழ்த்தாயின் தவப்புதல்வன் – கலைஞர்

இத்தலைப்புகளில் அமைச்சர் பெருமக்கள் தலைமையில் இணைத் தலைவர்கள், உறுப்பினர் செயலர் மற்றும் உறுப்பினர்கள் கொண்ட 12 குழுக்கள் (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) அமைத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.

இக்குழுக்கள் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பன்முகத்தன்மையை பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், மாணவர்கள், பெண்கள், அரசு ஊழியர்கள், பயனடைந்த மக்கள் ஆகியோருடன் இணைந்து எவ்வாறு கொண்டாடப்பட வேண்டும் என்பதற்கான ஆலோசனைகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல், பொது மக்கள் மற்றும் இளைஞர்கள் பயன்பெறும் விழாக்களாக அமைய வேண்டும் என்பதற்கான திட்டப் பணிகளை மேற்கொண்டு, அரசுடன் இணைந்து விழாக்களை சிறப்பாக நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்.

Also Read: ரூ.1,367 கோடி மதிப்பீட்டில் 390 முடிவுற்ற திட்டப் பணிகள்.. ஒரே நாளில் திறந்து வைத்து அசத்திய முதல்வர் !