Tamilnadu

ஒன்றிய அரசு வேலை : புதுச்சேரி பாஜக பிரமுகரிடம் பண மோசடி செய்த சென்னை பாஜக பிரமுகர்.. வலைவீசும் போலிஸ் !

புதுச்சேரி அருகே ஏம்பலம் நத்தமேடு என்ற பகுதி உள்ளது. இங்கிருக்கும் கோவில் தெருவைச் சோ்ந்தவர் காத்தவராயன். 35 வயதுடைய இவர் பாஜகவின் பிரமுகர் ஆவார். தற்போது இவர் புதுச்சேரி கோரிமேடு காமராஜா் நகரில் வசித்து வரும் இவர் அரசு வேலையில் சேர எண்ணியுள்ளார். எனவே அதற்காக தனக்கு தெரிந்த பாஜகவின் முக்கிய உறுப்பினர்களை சந்தித்து வந்துள்ளார்.

பாஜக பிரமுகரான 40 வயதான அறிவழகன்

இந்த சூழலில் காதவராயனுக்கு சென்னையைச் சோ்ந்த பாஜக பிரமுகரான 40 வயதான அறிவழகன் என்பவரது அறிமுகம் கிடைத்துள்ளது. எனவே அவரை அணுகிய காத்தவராயன், அறிவழகனிடமும் அவரது மனைவி லாவண்யா என்பவரிடமும் தனக்கு அரசு வேலை வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். இவர்களும் காத்தவராயனிடம் ஒன்றிய அரசின் உணவுக் கழகத்தில் இயக்குநர் பதவி வாங்கி தருவதாக கூறியுள்ளனர்.

ஆனால் அதற்காக பணம் கொடுக்க வேண்டும் என்று கூறியதால், கடந்த கடந்த 2020 அக்டோபா் 8-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை 7 தவணைகளில் அறிவழகன் மற்றும் அவரது மனைவி லாவண்யா வங்கி கணக்குகளில் ரூ.15.90 லட்சத்தை காத்தவராயன் செலுத்தியுள்ளார். ஆனால் காத்தவராயனுக்கு இயக்குநர் பதவியைப் பெற்றுத்தராமல் அறிவழகன் காலத்தை இழுத்துக்கொண்டே சென்றுள்ளார்.

தொடர்ந்து அவரை காத்தவராயன் அழைத்து தனது பணத்தை திரும்ப கேட்டுள்ளார். அதற்கு அறிவழகன் மற்றும் அவரது மனைவி சரிவர பதிலளிக்காமல் காலத்தை இழுத்தடித்துள்ளனர். மேலும் அறிவழகன் தலைமறைவாகிவிட்டார். இதையடுத்து தனக்கு வேலை வாங்கி தருவதாக கூறி பாஜக பிரமுகர் தன்னிடம் இருந்து ரூ.15.90 லட்சத்தை பெற்றுக்கொண்டு ஏமாற்றிவிட்டதாக புதுச்சேரி தன்வந்திரி காவல் நிலையத்தில் காத்தவராயன் புகார் அளித்தார்.

மேலும் அறிவழகனின் மனைவியும் இந்த சம்பவத்திற்கு உடந்தை என்று அவர் மீதும் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் இரண்டு பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தலைமறைவாக இருக்கும் அறிவழகனையும் தேடி வருகின்றனர். ஒன்றிய அரசின் உணவுக் கழகத்தில் இயக்குநர் பதவி பெற்றுத் தருவதாகக் கூறி, பாஜக பிரமுகரிடம் ரூ.15.90 லட்சம் மோசடி செய்ததாக அதே கட்சியைச் சோ்ந்த சென்னை பிரமுகர், அவரது மனைவியின் செயலால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

Also Read: பைக்கில் செல்லும்போது குறுக்கே வந்த மாடு: விபத்தில் சிக்கி மூளைச்சாவடைந்த மகன் -பெற்றோர் செய்த நெகிழ்ச்சி