Tamilnadu

வீட்டில் காதலை சொன்ன சகோதரிகள்.. எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்: அடுத்த நடந்த அதிர்ச்சி சம்பவம்!

திருச்சி மாவட்டம், அயன்புதுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பிச்சை. இவரது மனைவி அகிலாண்டேஸ்வரி. இந்த தம்பதிக்கு வித்யா, காயத்திரி என இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் திருப்பூரில் வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில் கோவில் திருவிழாவிற்காக இவர்கள் இருவரும் சொந்த ஊருக்கு வந்துள்ளனர்.

இதையடுத்து இவர்கள் தொடர்ந்து செல்போனில் பேசிக் கொண்டே இருந்துள்ளனர். இதைப் பார்த்த பெற்றோர்கள் இருவரிடத்திலும் யாரிடம் பேசிக் கொண்டே இருக்கீங்க என கேட்டுள்ளனர். இதற்கு மகள்கள் தாங்கள் காதலிப்பதாகக் கூறியுள்ளனர்.

இதைக்கேட்டுப் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பிறகு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் மனவேதனை அடைந்த இருவரும் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

பிறகு நீண்ட நேரம் ஆகியும் இவர்கள் வீடு திரும்பவில்லை. இதனால் பல இடங்களில் பெற்றோர் தேடிப் பார்த்துள்ளனர். அப்போது அதே பகுதியில் உள்ள கிணற்று அருகே இரண்டு செல்போன்கள் இருந்துள்ளது. இதைப்பார்த்த பொதுமக்கள் கிணற்றில் எட்டிப்பார்த்துள்ளனர். அப்போது கிணற்றில் சடலங்கள் மிதந்து இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றிலிருந்து சடலத்தை வெளியே எடுத்து உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பிறகு உயிரிழந்தது சகோதரிகள் வித்யா, காயத்திரி என்பது தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அக்கா, தந்கை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: 2 சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல்.. 73 வயது முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை: தேனி நீதிமன்றம் தீர்ப்பு!