Tamilnadu
பைக்கில் செல்லும்போது குறுக்கே வந்த மாடு: விபத்தில் சிக்கி மூளைச்சாவடைந்த மகன் -பெற்றோர் செய்த நெகிழ்ச்சி
நாகப்பட்டினம் மாவட்டம் பாப்பாக்கோயில் அருகே அமைந்துள்ள சமத்துவபுரத்தை சோ்ந்தவர்கள் பழனிவேல் - விஜயலட்சுமி தம்பதியினர். இவர்களுக்கு முகேஷ் என்ற 26 வயதில் மகன் ஒருவர் உள்ளார். படித்து முடித்து விட்டு தற்போது புகைப்பட கலைஞராக இவர் பணியாற்றி வருகிறார். இதனால் அடிக்கடி இவர் வெளியூர் செல்வது வழக்கம்.
இந்த சூழலில் கடந்த மே மாதம் 4-ம் தேதி அதிகாலை நேரத்தில் தனது உறவினர் வீட்டுக்கு சென்ற அவர், அங்கிருந்து தனது இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மாடு ஒன்று குறுக்கே வந்ததால் நிலைதடுமாறிய முகேஷ் கீழே விழுந்து விபத்தில் சிக்கினார். சாலையில் இரத்த காயங்களுடன் கீழே கிடந்த முகேஷை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் மீட்டு நாகை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் இதுகுறித்து போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞரை மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு அடைந்துவிட்டதாக இளைஞரின் பெற்றோரிடம் மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனை கேட்டு அதிர்ந்து போன குடும்பத்தினர், தனது மகன் இல்லை என்றாலும், அவர் மூலம் யாராவது வாழட்டும் என்று எண்ணி, முகேஷின் உறுப்புகளை தானம் செய்ய முடிவெடுத்தனர்.
பின்னர் இளைஞர் முகேஷின் உடல் உறுப்புகளான கல்லீரல், சிறுநீரகங்கள், கண்கள், கணையம் உள்ளிட்டவைகள் எடுக்கப்பட்டு, உறுப்புகள் தேவை படுவோரின் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதையடுத்து, தஞ்சையிலிருந்து கொண்டுவரப்பட்ட முகேஷின் உடலுக்கு கிராம மக்கள் அஞ்சலி செலுத்தினர்.
விபத்தில் சிக்க மூளைச்சாவடைந்த தங்கள் மகனின் உடல் உறுப்புகளை பெற்றோர் தானம் செய்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இதே போல் சென்னையில் பட்டம் பிடிக்க முயன்ற போது மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்த சிறுவனின் உடலை பெற்றோர்கள் தானமாக வழங்கியுள்ளது பலரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“இது நூல் அல்ல, நமது போர் ஆயுதம்”: ப.திருமாவேலன் எழுதிய மூன்று நூல்கள் வெளியீட்டு விழாவில் கி.வீரமணி உரை!
-
“நமது ஆட்சியின் Diary ; எதிரிகளுக்கு பதில் சொல்லும் நூல்கள்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
சென்னை மக்களே கொண்டாட்டத்திற்கு தயாராகுங்கள் : ஜன.14 ஆம் தேதி தொடங்கிறது சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா
-
சென்னை மெட்ரோ ரயில் Phase II : அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!
-
வேளாங்கண்ணி TO இலங்கை... ரூ.6 கோடி மதிப்பிலான போதைப்பொருள்.. இந்து மக்கள் கட்சி நிர்வாகி கைது!