Tamilnadu

டெண்டர் முறைகேடு.. நடவடிக்கை எடுக்க எந்த தடையும் இல்லை: உயர்நீதிமன்றம் அதிரடி - வசமாக சிக்கிய வேலுமணி!

2020ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் அறப்போர் இயக்கம் வழக்கு ஒன்று தொடுத்தது. அதில், சென்னை மாநகராட்சி பகுதிகளில் கடந்த 2018 மற்றும் 2019 ம் ஆண்டுகளில் சாலை மறு சீரமைப்பு, மழை நீர் வடிகால் கட்டமைப்புகளுக்கான 37 டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்துள்ளது என்றும், ரூ. 300 கோடி மதிப்பில் 3800 சாலைகள் மறு சீரமைப்பு மற்றும் 290 கோடி மதிப்பிலான மழைநீர் வடிகால் பணிகளுக்கான டெண்டரிலும் முறைகேடுகள் நடந்துள்ளது என தெரிவித்துள்ளது.

அதோடு,"ஒரே ஐபி முகவரியிலிருந்து குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே இந்த டெண்டர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் இந்த முறைகேட்டில் அப்போதைய உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி மற்றும் அதிகாரிகள் கோடிக்கணக்கில் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத் துறையிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை" என தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையிலிருந்த இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபூர்வாலா,நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய முதன்மை அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம்,அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆகியோர் ஆஜராகி, ஆரம்பக் கட்ட விசாரணை நடத்தப்பட்டு விட்டது என்றும், ஏற்கனவே இந்த வழக்கில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து உயர்நீதிமன்ற ஒப்புதல் பெற வேண்டும் என உத்தரவிட்டுள்ளதாக என்று தெரிவித்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவு மாற்றி அமைக்கப்படுவதாகவும் அரசு சட்டத்திற்கு உட்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க எந்த தடையும் இல்லை என்றும், அரசுக்கு அனைத்து அதிகாரங்கள் உள்ளது என உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.

Also Read: குஜராத்தின் இன்றைய கொடூரம்.. இங்கு எப்படி அசைவ உணவு சமைக்கலாம்? : நாகாலாந்து இளைஞர்கள் மீது தாக்குதல்!