Tamilnadu

ரஷ்ய மருத்துவ மாணவர்களிடம் லட்சக்கணக்கில் மோசடி.. புகாரின்பேரில் அதிரடியாக கைது செய்த சென்னை போலிஸ் !

கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ராணி. நடுத்தர குடும்பத்தை சேர்ந்த இவருக்கு மஞ்சு தர்ஷிணி என்ற மகள் உள்ளார். மருத்துவம் படிக்க வேண்டும் என்று விரும்பிய இவர் தற்போது ரஷ்யாவின் சிம்பர்போலில் உள்ள மருத்துவ பல்கலைக்கழகத்தில் MBBS மருத்துவ படிப்பு படித்து வருகிறார். இந்த சூழலில் மஞ்சு தர்ஷிணிக்கு தனது கல்லூரியில் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை வந்துள்ளது.

ரஷ்ய நாட்டு விதிமுறைகளின்படி கல்லூரி கட்டணத்தை ரஷ்ய பணமான ரூபிளில்தான் கட்டணம் செலுத்த வேண்டும். எனவே இவர் தனக்கு தெரிந்த நண்பர் மூலம் உதவி கேட்டுள்ளார். அவரோ கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வரும் தமிழ்நாட்டை சேர்ந்த பொன்னுசெல்வம், கவியரசு ஆகியோரிடம் கேட்க சொல்ல, மஞ்சுவும் அவர்கள் இரண்டு போரையும் அணுகியுள்ளார்.

அவர்களும் தாங்கள் இதனை பார்த்துக்கொள்கிறோம் என கூறவே, அவர்களை நம்பி மஞ்சுவும் தன்னிடம் இருந்த ரூ.3,53,000 பணத்தை கொடுத்துள்ளார். அவர்களோ போரூர் மாங்காடு எஸ் எஸ் நகரை சேர்ந்த குழந்தை அந்தோணி ராஜா என்பவரிடம் இந்த பணத்தை அனுப்பி ரூபிளாக மாற்றி தர கூறியுள்ளனர். ஆனால் பல நாட்கள் ஆனபோதும் அந்த பணம் திரும்ப வரவில்லை.

எனவே இதுகுறித்து மாணவி மஞ்சு, பொன்செல்வம் மற்றும் கவியரசுவிடம் கேட்டுள்ளார். அப்போது அவர்கள் இந்த பணம் அந்தோணி ராஜாவிடம் இருப்பதாக கூறி, அந்தோணியை தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனால் அவரது மொபைல் எண்ணை தொடர்பு கொள்ள இயலவில்லை. இதையடுத்து அந்த மாணவி தனது தாயிடம் இதுகுறித்து தெரிவிக்கவே, உடனே அவர் போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது குற்றம்சாட்டப்பட்ட அந்தோணி ராஜா, ஏற்கனவே இது போல் 40க்கும் மேற்பட்ட மாணவர்களிடம் மோசடி செய்து சுமார் 1.50 கோடி வரை ஏமாற்றியுள்ளது தெரியவந்தது. இதற்கு பொன்செல்வம் மற்றும் கவியரசு ஆகியோரும் உடந்தை என்று கூறப்படுகிறது.

இதையடுத்து அந்தோணி ராஜாவை கைது செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். ரஷ்யாவில் மருத்துவம் படித்து வரும் பண மோசடி செய்த சென்னையை சேர்ந்த நபரை காவல் துறையினர் கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: AICTE பெயரை பயன்படுத்தி இளைஞர்களுக்கு வலை.. ரூ.1.5 கோடி மோசடி - 8 பேரை கைது செய்த போலிஸ்!