Tamilnadu

முத்தமிழறிஞர் கலைஞரின் 100-வது பிறந்த நாள்.. மலர்தூவி மரியாதை செலுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஐந்து முறையும், 13 முறை சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு 13 முறை வெற்றி பெற்றவரும், தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும், தமிழ்நாட்டின் அரசியல் தலைவராக மட்டுமல்லாமல், இந்திய அரசியலின் திசையைத் தீர்மானிப்பவராகவும் திகழ்ந்து நூற்றாண்டு நாயகர் முத்தமிழறிஞர் கலைஞரின் பன்முக ஆற்றலையும், அவர் படைத்தளித்த மக்கள் நலத் திட்டங்களையும் தமிழ்நாட்டின் வருங்காலத் தலைமுறையினர் என்றென்றும் நினைவில் போற்றும் வகையில் முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழா மாநிலம் முழுவதும் கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன் ஒருபகுதியாக முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு இலச்சினையை வெளியிட்டு கலைஞரின் நூற்றாண்டு விழாவினை நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதையடுத்து இன்று தமிழ்நாடு முழுவதும் முத்தமிழறிஞர் கலைஞரின் 100-ஆவது பிறந்த கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மெரினா கடற்கரையில் அமைந்துள்ள முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் முரசொலி வளாகத்தில் அமைந்துள்ள முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவச்சிலைக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இதையடுத்து சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைந்துள்ள முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவச்சிலைக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பிறகு சென்னை,கோபாலபுரம் இல்லத்திற்கு சென்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்

இதனைத் தொடர்ந்து சென்னை, சி.ஐ.டி. நகர் இல்லத்திற்கு சென்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

Also Read: “எல்லா நாளும் மலரும் ‘முரசொலி’ தாளும் கலைஞரின் தோளுக்கு விழும் புகழ்மணி மாலைகளே!” : முரசொலி புகழாரம்!