Tamilnadu

2 நாடுகள்.. 9 நாட்கள்.. 13 நிறுவனங்கள்: முதலீடுகளை அள்ளிக்கொண்டு இன்று தாயகம் திரும்பும் முதலமைச்சர்!

தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி அமைந்ததில் இருந்து தொழில்துறையில் கவனம் தெலுத்தப்பட்டு வருகிறது. 2030ம் ஆண்டிற்குள் தமிழ்நாடு 1 ட்ரில்லியன் என்ற பொருளதார இலக்கை நோக்கி செயல்பட்டு வருகிறது.

இதன் ஒருபகுதியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல்முறையாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஐக்கிய அரபு நாட்டிற்கு பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தின் மூலம் 6,100 கோடி ரூபாய் முதலீடுகள் மூலம் 15,100 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தக்கூடிய வகையில் 6 நிறுவனங்களோடு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டது. அதில் ஷெராப் குழும நிறுவன முதலீடுகளை மேற்கொண்டுள்ளது. லூலூ பன்னாட்டு குழுமம் கோயம்புத்தூரில் தன் திட்டத்தை தொடங்கிவிட்டது.

மேலும் தி.மு.க ஆட்சி பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகளில் ஜுலை 2021 முதல் 226 திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து இடப்பட்டுள்ளன. 2,95,339 கோடி ரூபாய் அளவில் முதலீடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை முழுமையாக செயல்படுத்தும்போது, 4,12,565 நபர்களுக்கு வேலைவாய்ப்பு நிச்சயமாக கிடைக்கும்.

இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு மேலும் முதலீடுகளை ஈர்க்கும் வகையிலும், 2024 ஜனவரி மாதம் சென்னையில் நடைபெறவிருக்கக்கூடிய உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள முதலீட்டாளர்களை அழைப்பதற்காக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு 9 நாள் பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றுள்ளார்.

மே23ம் தேதி சென்னையில் இருந்து விமானம் மூலம் முலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் சென்றார். சிங்கப்பூர் நாட்டிற்கு சென்ற தமிழ்நாடு முதலமைச்சர் Temasek, Sembcorp, CapitaLand ஆகிய நிறுவனங்களின் தலைமை செயல் அலுவலர்களை சந்தித்துப் பேசினார். சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளவும் அழைப்பு விடுத்தார்.

பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், Singapore Indian Chamber of Commerce and Industries (SICCI),Singapore India Partnership Office (SIPO), Singapore India Partnership Office (SIPO),Hi-P International Pvt. Ltd., Singapore, Singapore University of Technology & Design (SUTD), ITE Education Services, Singapore ஆகிய ஆறு நிறுவனங்களுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

சிங்கப்பூர் தமிழ் அமைப்புகள் இணைந்து நடத்திய கலாச்சார சந்திப்பு நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது சிங்கப்பூரின் உயர்வுக்கு காரணமாக இருந்த முன்னாள் பிரதமர் லீ குவான் யூ அவர்களுக்கு திருவாரூர் மாவட்டம் மன்னார்க்குடியில் சிலையும், அவரது பெயரில் நூலகமும் அமைக்கப்படும் என அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இந்த அறிவிப்பை பார்த்து சிங்கப்பூர் மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

இதனைத் தொடர்ந்து சிங்கப்பூர் நாட்டின் உள்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் கே. சண்முகம் அவர்களை சந்தித்து பேசினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அப்போது சிங்கப்பூரிலிருந்து மதுரைக்கு நேரடி விமான சேவையை தொடங்கிட உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இது குறித்து ஒன்றிய அரசிடம் வலியுறுத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். மேலும் அங்கு நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டிலும் கலந்து கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டில் தொழில்நிறுவனங்களை தொடங்குவதற்கு அழைப்பு விடுத்தார்.

பின்னர் மே 25ம் தேதி சிங்கப்பூர் பயணத்தை முடித்துக் கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரத்திற்கு சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மே 26ம் தேதி ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்புடன் (Japan External Trade Organization – JETRO) இணைந்து நடத்தப்பட்ட மாபெரும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். இம்மாநாட்டில் சுமார் 80 ஜப்பானிய நிறுவனங்களின் மூத்த மேலாண்மை அலுவலர்கள் கலந்து கொண்டனர். முதலீட்டாளர்களை சிவப்புக் கம்பளம் விரித்து தமிழ்நாடும், வரவேற்கிறது என பேசினார்.

பிறகு மே 27ம் தேதி ஜப்பான் நாட்டின் ஒசாகாவில் உள்ள கோமாட்சு நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலையை பார்வையிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அப்போது அத்தொழிற்சாலையின் செயல்பாடுகள் குறித்த காட்சி விளக்கப்படத்தை (Power Point Presentation) பார்வையிட்டு, அந்நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் டகாயுகி புரோகுஷி, கோ கமாடா ஆகியோருடன் கலந்துரையாடினார்.

இதனைத் தொடர்ந்து ஜப்பானின் ஒசாகா நகரில் நடைபெற்ற இந்திய மக்களின் கலாச்சார சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். பின்னர் மே 28ம் தேதி ஒசாகா நகரிலிருந்து டோக்கியோவுக்கு புல்லட் ரயிலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணம் செய்தார். "Bullet Train-களுக்கு இணையான இரயில் சேவை நமது இந்தியாவிலும் பயன்பாட்டுக்கு வர வேண்டும்; ஏழை - எளிய - நடுத்தர மக்கள் பயனடைந்து, அவர்களது பயணங்கள் எளிதாக வேண்டும்" என தனது பயண அனுபவம் குறித்து ட்விட்டரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டிருந்தார்.

பிறகு மே 29ம் தேதி KyoKuto Satrac, Mitsuba, Shimizu Corporation, Kohyei, Sato-Shoji Metal Work, Tofle ஆகிய ஆறு நிறுவனங்களுடன் ரூ.818.90 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.

இதைனைத்தொடர்ந்து மே 30ம் தேதி ஒம்ரான் ஹேல்த்கேர் நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ.128 கோடி முதலீட்டில் மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பு தொழிற்சாலை நிறுவிட புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.

பின்னர் ஜப்பான் பணத்தை முடித்துக் கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டோக்கியோ விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு திரும்பிக்கொண்டிருக்கிறார். இந்த 9 நாட்கள் பயணத்தில் 10க்கும் மேற்பட்ட நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு பல கோடி முதலீடுகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாயகம் திரும்பிக்கொண்டு இருக்கிறார்.

Also Read: “தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு கை குலுக்கிய சிங்கப்பூர்-ஜப்பான்” : உடன்பிறப்புகளுக்கு முதலமைச்சர் மடல்!