Tamilnadu

இலங்கை தமிழர் முகாமைச் சேர்ந்த மாணவியின் படிப்புக்கு உதவிய அமைச்சர் பிடிஆர்.. நேரில் நன்றி சொன்ன மாணவி !

திமுக அரசு ஆட்சிக்கு வந்ததும் 'இலங்கை அகதிகள் முகாம்' என்பதை 'இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்' என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயர் மாற்றினார். 'இந்தப் பெயர் மாற்றம் வெறும் பலகை அளவில் மட்டும் நின்றுவிடக்கூடாது' என்றும் கூறினார்.

முதல்வர் சொன்னதை நடைமுறைப்படுத்தும் வகையில் முகாம் தமிழர்களுக்கு பலர் நேரடியாகவும், தனிப்பட்ட முறையிலும் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்கள். அந்த வகையில் மதுரை ஆணையூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் மாணவி ரித்யுஷாவின் மேற்படிப்புக்கு தகவல் தொடர்பு மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் அவர்கள் உதவியது முகாம் மக்களை நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது.

பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் 600க்கு 591 மதிப்பெண் எடுத்து மாணவி ரித்யுஷா சாதனை புரிந்திருந்தார். சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி சேனலில் மூலம் மாணவி குறித்து அறிந்த அமைச்சர் அவர்கள் அம்மாணவியையும், அவரது பெற்றோரையும் தனது இல்லதிற்கு அழைத்து வாழ்த்தினார்.

"படிக்க வசதியில்லை ஆன்லைன் மூலம் கல்வி கற்க உள்ளேன்" என மாணவி சொன்னதை கேட்டு அதிர்ந்த அமைச்சர் கல்லூரியில் சேர்ந்து படிக்க வேண்டியதன் அவசியத்தை அம்மாணவிக்கு எடுத்து கூறினார். உடனே டோக் பெருமாட்டி கல்லூரி முதல்வரிடம் பேசி அப்பெண்ணின் மேற்படிப்பு செலவு முழுவதையும் தானே ஏற்றுக்கொள்வதாக கூறி நல்ல மதிப்பெண் எடுத்த அம்மாணவி விரும்பும் துறையில் இடம் தர வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

லேடி டோக் கல்லூரி முதல்வர் அம்மாணவிக்கு சிறப்பு அனுமதியின் அடிப்படையில் இடம் தற்போது ஒதுக்கியுள்ளார். தான் எடுத்த மதிப்பெண்ணுக்கு ஏற்ற படிப்பில் இடம் பெற்றுத்தந்து, கல்லூரிக் கட்டணத்தையும் செலுத்திய அமைச்சருக்கு மாணவி அமைச்சரின் இல்லம் வந்து மகிழ்ந்து நன்றி தெரிவித்தார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Also Read: "பாஜக நியாயமற்ற முறையில் நடத்துகிறது"- மகாராஷ்டிராவில் ஷிண்டே தரப்பு சிவசேனா பகிரங்க குற்றச்சாட்டு !