Tamilnadu

பத்தாவது வகுப்பில் அதிக மதிப்பெண்.. மாணவரின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றிய கனிமொழி MP !

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஏப்ரல் 6 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை 9 லட்சத்து 38 ஆயிரத்து 67 மாணவர்கள் எழுதியிருந்தனர். இந்த தேர்வு முடிவுகள் கடந்த 19-ம் தேதி வெளியானது. இதில் மாணவர்கள் 88.16%-மும், மாணவிகள் 94.66%-மும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேபோல் 1023 அரசுப் பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன.

அந்த வகையில் தூத்துக்குடியில் 495 மதிப்பெண்கள் பெற்று அர்ஜூன பிரபாகரன் என்ற மாணவர் சாதனை படைத்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு பகுதியைச் சேர்ந்தவர்கள் மாணிக்கவாசகம் - பண்டாரச் செல்வி தம்பதி. இவர்களது மகன் அர்ஜூன பிரபாகரன் திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் உள்ள நூறாண்டு பழமை வாய்ந்த அரசு உதவி பெறும் பள்ளியான, மதிதா இந்து கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்தார்.

இதனிடையே கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் மாணவன் அர்ஜூன பிரபாகரனின் தந்தை மாணிக்க வாசகம் உயிரிழந்துவிட்டார். இதனால் வீட்டில் வறுமை சூழ்ந்து கொண்டது. கணவனை இழந்த நிலையில் எப்படியாவது தனது மகனை படிக்க வேண்டும் என பண்டாரச்செல்வி ஆசைப்பட்டுள்ளார். அதேபோல் மாணவனின் நிலைமையை அறிந்த பள்ளி நிர்வாகமும் அவனுக்கு பல்வேறு உதவிகளை செய்தது. அதன்படி மாணவனும் நன்கு பிடித்து 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 495 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.

இந்த சூழலில் கடந்த திங்கட்கிழமை (22/05/2023) தூத்துக்குடி மாவட்டம், ஆதிச்சநல்லூர் அருகிலுள்ள அகரம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கனிமொழி எம்.பி, கலந்துகொண்டு சிறப்பித்தார். அப்போது மாணவன் அர்ஜூன பிரபாகரன், கனிமொழி ஏ.பி-யை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். மேலும் மாணவன் அர்ஜூன பிரபாகரன் தனக்கு மூக்குக் கண்ணாடியும் மற்றும் பட்டா வேண்டும் என்று அவரிடம் கோரிக்கை விடுத்தார்.

இந்த நிலையில் இன்று (26/05/2023) தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, 10 ஆம் வகுப்பில் 495 மதிப்பெண்கள் எடுத்து மாணவன் அர்ஜூன பிரபாகரன் கோரிக்கை வைத்தபடியே அவருக்கு புதிய மூக்குக் கண்ணாடி மற்றும் பட்டா வழங்கினர். அதோடு படித்து வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்று மாணவருக்கு அறிவுரைகூறி, வாழ்த்தினார்.

10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற தூத்துக்குடி மாவட்ட மாணவரின் கோரிக்கையை உடனே நிறைவேற்றிய கனிமொழி எம்.பி-யின் செயல் மக்கள் மத்தியில் பாராட்டை பெற்று வருகிறது.

Also Read: எவரெஸ்ட் உச்சியில் ஏறி வெற்றிக்கொடிய நாட்டிய முதல் தமிழ் பெண்.. ஊக்குவித்த தமிழ்நாடு அரசு !