Tamilnadu

கோவையில் காணாமல் போன சிறுவன்.. பதறிய பெற்றோர்.. காவல்துறையின் சாமர்த்தியத்தால் பத்திரமாக மீட்பு !

சென்னை அயப்பாக்கம் ராஜம்மாள் நகரை சேர்ந்தவர் மகாலட்சுமி. இவருக்கு 13 வயதில் யுவன் கதிரவன் என்ற மகன் உள்ளார். ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்டுள்ள இந்த சிறுவனை, கோடை விடுமுறை என்பதால் கோயம்புத்தூருக்கு உறவினர் வீட்டுக்கு கூட்டி சென்றுள்ளார் தாய் மகாலட்சுமி.

கோவை மசக்காளிபாளையம் சின்னசாமி லே-அவுட் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு மகாலட்சுமி தனது குடும்பத்தோடு சென்றிருந்தார். இந்த சூழலில் அங்கே வீட்டில் இருந்த சிறுவன் நேற்று காலை சுமார் 8.30 மணி அளவில் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். சிறுவன் வீட்டை விட்டு சென்றுள்ளது குறித்து யாரும் அறிந்திருக்கவில்லை.

சிறிது நேரத்தில் சிறுவனை காணவில்லை என்று தாய் உட்பட உறவினர்கள் அனைவரும் அனைத்து இடங்களிலும் தீவிரமாக தேடினர். ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதனால் அவர் கடத்தப்பட்டாரோ என்ற சந்தேகத்தில் இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் காணாமல் போன சிறுவனை குறித்து விசாரணை நடத்தினர்.

சிறுவனை கண்டுபிடிக்க அதிகாரிகள் 6 தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வந்தனர். தொடர்ந்து அந்தப் பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். தொடர்ந்து சிறுவனின் புகைப்படங்கள் சுற்றியுள்ள பகுதிகளின் காவல் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டது.

தொடர்ந்து தீவிரமாக விசாரித்ததில், காணாமல் போன சிறுவன் இன்று நீலகிரி மாவட்ட காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளார். சிறுவனை மீட்ட காவல்துறையினர் கோவை மாநகர காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீசார் கோவையில் இருந்து நீலகிரி விரைந்துள்ளனர்.

Also Read: வெளியே வெண்கலம்.. உள்ளே சிலிக்கான்.. இறந்த மனைவிக்கு சிலை வைத்த 70 வயது முதியவர்:நினைவு நாளில் நெகிழ்ச்சி