Tamilnadu

செல்போனில் பேசியதால் தகராறு.. 2 மகள்களை கொன்று தற்கொலை செய்துகொண்ட தாய்.. சோகத்தில் மூழ்கிய கிராமம் !

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தேவதானம் என்ற பகுதியை சேர்ந்தவர்கள் முத்துகுமார் - ராமுத்தாய் தம்பதியினர். வெல்டிங் பட்டறை தொழிலாளியாக முத்துகுமார் பணியாற்றி வருகிறார். அதுபோல் மனைவி ராமுத்தாயும் அந்த பகுதியில் கூலி தொழில் செய்து வருகிறார். இந்த தம்பதிக்கு நிஷா, அர்ச்சனா தேவி என்று 2 மகள்கள் உள்ளனர்.

இந்த நிலையில் ராமுத்தாய் அவரது குடும்பத்தாருடனும் நண்பர்களுடனும் அதிக நேரம் போனில் பேசிக்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இவருக்கும் இவரது கணவர் முத்துகுமாருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த சூழலில் கடந்த சனிக்கிழமை மாலை நேரத்தில் மனைவி ராமுத்தாய் போனில் பேசிகொண்டிருந்தார்.

அப்போது வேலை முடிந்து வீட்டுக்கு வந்த கணவர் முத்துகுமார், போனில் பேசிக்கொண்டிருந்த மனைவியிடம் சண்டையிட்டுள்ளார். இருப்பினும் தொடர்ச்சியாக போனில் பேசிக்கொண்டிருந்தால் கோபமடைந்த முத்து, தனது மனைவியின் மொபைல் போனை பிடுங்கி கீழே போட்டு உடைத்துள்ளார். இதனால் இருவருக்கும் பெரிய வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து இவர்கள் சண்டை 2 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்துள்ளது. இந்த சூழலில் நேற்று மாலையும் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் மனைவி ராமுத்தாய் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அப்போது அவர் போகும்போது, வெளியே விளையாடிக்கொண்டிருந்த மூத்த மகளையும், தூங்கி கொண்டிருந்த 2-வது மகளையும் கூட்டி சென்றுள்ளார். இதையடுத்து நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாத மனைவியை கணவர் தேடியுள்ளார். அவர் எங்கு தேடியும் கிடைக்காததால் அக்கம்பக்கத்தினருக்கும் தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து அனைவரும் தேடியுள்ளனர். தொடர்ந்து தேடுகையில் இன்று காலை அப்போது அந்த பகுதி விவசாய கிணற்றில் 2 சடலங்கள் கிடந்துள்ளது. இதனை கண்டு அதிர்ந்த ஊர்மக்கள் இதுகுறித்து காவல்துறைக்கும், தீயணைப்புத்துறைக்கும் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள் கிணற்றில் இருந்த சடலங்களை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அது வீட்டை விட்டு சென்ற ராமுத்தாய் மற்றும், அவரது மூத்த மகள் நிஷா என்பது தெரியவந்தது. இதையடுத்து கிணற்றில் இருந்த சடலங்களை மீட்ட மீட்பு குழு, தொடர்ந்து 2-வது மகளின் சடலத்தையும் நீண்ட மணி நேரம் தேடுதலுக்கு பிறகு கிணற்றில் இருந்து மீட்டனர். பின்னர் அனைவரது உடல்களையும் உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது குடும்ப தகராறு காரணமாக மகள்களை கொன்று, தாயும் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் தெரியவந்தது. இதையடுத்து ராமுத்தாயின் குடும்பத்தாரிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். செல்போனில் பேசியதால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டதால் மன உளைச்சலில் இருந்த தாய், தனது மகள்களை கொன்று, தானும் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் ராஜபாளையத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குடும்ப விவகாரம் அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை காரணமாக “மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக அரசின் சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 எண்ணை அழைத்து, இலவச கவுன்சிலிங் பெறலாம்.”

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், கழக நிகழ்வுகள் மற்றும் இன்றைய முக்கிய செய்திகள் என அனைத்து செய்திகளை உடனுக்கு உடன் அறிய கலைஞர் செய்திகள் இணையதளத்தில் தெரிந்துக்கொள்ளலாம்!

Also Read: தாலி கட்டும் நேரத்தில் ஓடி போன மாப்பிள்ளை.. 20 கி.மீ வரை ஓடி சென்று பிடித்த மணமகள்.. பின்னணி என்ன ?