Tamilnadu

10,000 பக்கம் குற்றப்பத்திரிகை தாக்கல்: சிக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன், சி.விஜயபாஸ்கர்!

2016 முதல் 2021ம் ஆண்டு வரை அ.தி.மு.க ஆட்சியின் போது உயர் கல்வித் துறை அமைச்சராக இருந்த கே.பி. அன்பழகன் 11 கோடியே 32 லட்சம் அளவிற்கு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இந்த புகாரை அடுத்து தருமபுரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்கு பதிவு செய்து கடந்த ஜனவரி 19 ஆம் கே.பி.அன்பழகன் வீடு உள்ளிட்ட 58 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின் முடிவில் முக்கிய ஆவணங்களை கைப்பற்றப்பட்டது‌.

இதனைத் தொடர்ந்து கே.பி.அன்பழகன் உறவினர்களான சரவணன், சரவணகுமார், மல்லிகா, தனபால், மாணிக்கம் ஆகியோர் உடந்தையுடன் அவரது பெயரிலும், அவரது குடும்பத்தினர் பெயரிலும் நிலங்கள், தொழில் முதலீடு, வங்கி இருப்புகள், இயந்திர தளவாடங்கள், ஆபரணங்கள், வாகனங்கள் உள்ளிட்ட சொத்துக்களை, முறையீடாக பெற்ற பணத்தையும், அவருக்கு சொந்தமான பச்சையப்பன் சரஸ்வதி பச்சைப்பன் அறக்கட்டளைக்கு அனுப்பியதன் வழியாக என மொத்தம் ரூ.45,20, 53,363 வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது தெரியவந்தது.

இந்த வழக்கின் புலன் விசாரணை முடிக்கப்பட்டு இன்று தருமபுரி மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு போலிஸார் 10,000 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தனர்.

1.கே.பி.அன்பழகன் 2. மனைவி மல்லிகா 3. மகன் சசிமோகன் 4. சந்திரமோகன் 5. மருமகன் ரவிசங்கர் 6.அக்கா மகன் சரவணன் 7.அக்கா மகன் சரவணக்குமார் 8. காரிமங்கலம் டவுன் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் மாணிக்கம் 9. பள்ளி நிர்வாகி தனபால், சரஸ்வதி பச்சைப்பன் அறக்கட்டளை உள்ளிட்ட 11 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கின் குற்றப் பத்திரிக்கை சுமார் 10,000 பக்கங்கள் அளவில் நீதியரசர் சுரேஷிடம் தாக்கல் செய்யப்பட்டது.

அதேபோல், அ.தி.மு.க ஆட்சியில் சுகாகாரத்துறை அமைச்சராக இருந்த சி.விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தாக புதுக்கோட்டை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவில் கடந்த 2021-ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இன்று சி.விஜயபாஸ்கருக்கு எதிராக புதுக்கோட்டை நீதிமன்றத்தில் 216 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று தாக்கல் செய்தனர்.

தி.மு.க ஆட்சி பொறுப்பேற்ற பிறகு அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்களான தங்கமணி, வேலுமணி, சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தாக வழக்கு பதிவு செய்யப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. இதையடுத்து இன்று கே.பி அன்பழகன் மற்றும் சி.விஜயபாஸ்கர் இருவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read: ”முட்டாள்தனமான நடவடிக்கை; ஆனால் மகிழ்ச்சி”.. ஒன்றிய அரசை கிண்டல் அடித்த ப.சிதம்பரம்!