Tamilnadu

”500 சந்தேகங்கள்..1000 மர்மங்கள்”: ரூ.2000 செல்லாது என்ற முடிவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

கறுப்புப் பணம், கள்ளப்பணத்தை ஒழிப்பதற்காக மோடி அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்ற பெயரில் 2016 நவம்பர் 8ம் தேதி இரவு திடீரென தொலைக்காட்சியில் பேசிய பிரதமர் மோடி பழைய 500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார்.

இந்த பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் மூலம் நாடு முழுவதும் புழக்கத்தில் இருந்த மொத்த பணத்தில் 86 சதவீதம் திரும்பப்பெறப்பட்டது. இதற்குப் பதிலாக புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் விநியோகிக்கப்பட்டன. ஒன்றிய அரசின் இந்த முடிவிற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்தது. பலரும் வங்கியில் பணத்தை மாற்றும் போது உயிரிழந்த கொடுமை சம்பவமும் நடந்தது.

இந்நிலையில் 2017 மார்ச் 31ம் தேதி புள்ளிவிவரத்தின்படி நாட்டின் மொத்த ரூபாய் நோட்டுகளின் மதிப்பில் 2000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பு 50.2% இருந்தது. 2020ம் ஆண்டு முதல் 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதை ரிசர்வ் வங்கி நிறுத்தியது.

தற்போது புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் அக்டோபர் 30ம் தேதி முதல் ரூ.2000 செல்லாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ரூ.2000 நோட்களை கையில் வைத்திருப்பவர்கள் வரும் செப்டம்பர் 30ம் தேதிக்குள் வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம் என ஆர்.பி.எஸ் அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்புக்குக் காங்கிரஸ், தி.மு.க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனங்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில் ரூ.2,000 நோட்டு செல்லாது என்ற ஒன்றிய அரசின் முடிவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்

இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "500 சந்தேகங்கள். 1000 மர்மங்கள். 2000 பிழைகள். கர்நாடகப் படுதோல்வியை மறைக்க ஒற்றைத் தந்திரம்" என தெரிவித்துள்ளார்.

Also Read: இன்று முதலமைச்சராக பதவியேற்கும் சித்தராமையா.. 8 பேர் கொண்ட அமைச்சரவை பட்டியல் வெளியீடு: யார் யார் ?