Tamilnadu

”இந்துக்களின் முதல் எதிரியே பா.ஜ.கதான்”.. தொல்.திருமாவளவன் ஆவேச பேச்சு!

மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடி மக்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டத்தைக் கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்குக் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தலைமை தாங்கினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய தொல். திருமாவளவன், "மணிப்பூரில் பழங்குடியின மக்கள் இட ஒதுக்கீடு கேட்டு ஜனநாயக முறைப்படி ஆர்ப்பாட்டம் நடத்தினர். உடனே பா.ஜ.க மோடி அரசு திட்டமிட்டு துணை ராணுவ படையை அனுப்பியது. பா.ஜ.க ஆர்.எஸ்.எஸ் சூழ்ச்சியால் வன்முறை வெறியாட்டம் தூண்டி விடப்பட்டது. மணிப்பூர் கலவரத்திற்குக் காரணம் பா.ஜ.கவின் வாக்கு வங்கி அரசியல் தான்.

தமிழ்நாட்டில் பா.ஜ.க காலூன்றி விட்டால் மணிப்பூரைப் போலவே தமிழ்நாடும் பற்றி எரியும். பா.ஜ.க அர்ப்ப அரசியலைச் செய்து வருகிறது. பாஜக சராசரி அரசியல் கட்சி அல்ல என்பதற்கு மணிப்பூர் கலவரமே சாட்சி.

கர்நாடகாவில் 40 இந்துக்கள் பா.ஜ.கவிற்கு எதிராக வாக்களித்துள்ளனர். பா.ஜ.கவின் மதவாத வெறுப்பு அரசியல் எடுபடவில்லை. இந்து பெரும்பான்மை வாதம் என்பது வாக்கு வங்கிக்காகப் பயன்படுத்துகின்ற ஒரு சொல்லாடல்.

பா.ஜ.க மண்ணை கவ்வும் காலம் வரும். அவர்கள் பேசும் நச்சுக் கொள்கையை விரட்டியடிக்கும் காலம் வரும். பா.ஜ.க பேசும் நச்சு கொள்கையை வேறு எந்த அரசியல் கட்சியும் பேசுவதில்லை. இந்துக்களின் முதல் எதிரியே பா.ஜ.கதான், இந்துக்களுக்கு எதிரான அரசியல் இயக்கம் பா.ஜ.க" என தெரிவித்துள்ளார்.

Also Read: இந்து - இந்தி - இந்தியா.. மழுங்கி வரும் பா.ஜ.கவின் ஒற்றை எதேச்சதிகாரம்: முரசொலி தாக்கு!