Tamilnadu
விழுப்புரம் கள்ளச்சாராய விவகாரம்: பணியிடை நீக்கம்.. ரூ.10 லட்சம் நிவாரணம்.. - முதலமைச்சர் உத்தரவு !
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பம் கடற்கரை ஓரம் உள்ள வம்பாமேட்டைச் சேர்ந்த சங்கர் (வயது 50). தரணிவேல் (50). மண்ணாங்கட்டி (47). சந்திரன் (65). சுரேஷ் (65). மண்ணாங்கட்டி (55) ஆகியோர் கள்ளச்சாராய பாக்கெட்டுகளை வாங்கி குடித்துள்ளனர். இதில் அனைவரும் வாந்தி மயக்கம் ஆன நிலையில், புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கே தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த சங்கர் என்பவர் நேற்று இரவு உயிரிழந்தார். தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுரேஷ், தரணிவேல் ஆகிய 2 பெரும் சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சூழலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே எக்கியார் குப்பத்தில் கள்ளச்சாராயம் அருந்தியதால் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுரேஷ், சங்கர் மற்றும் தரணிவேல் ஆகியோர் உயிரிழந்தனர் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையும், அதிர்ச்சியும் அடைந்தேன்.
கள்ளாச்சாராயம் மற்றும் போதைப்பொருட்களை முற்றிலும் ஒழிக்க இந்த அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், இச்சம்பவம் நடைபெற்ற பகுதியைச் சேர்ந்த மரக்காணம் காவல் நிலைய ஆய்வாளர் அருள் வடிவழகன், உதவிஆய்வாளர் தீபன், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஆய்வாளர் மரியா சோபி மஞ்சுளா மற்றும் உதவி ஆய்வாளர் சிவகுருநாதன் ஆகியோர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்த அமரன், த/பெ.வேணு கைது செய்யப்பட்டுள்ளார். இதில் தொடர்புடைய இதர குற்றவாளிகளைத் தேடும் பணியும் விரைவுபடுத்தப்பட்டுள்ளது. மேலும், இச்சம்பவத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளித்திட அறிவுறுத்தியுள்ளேன்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் மற்றும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 இலட்சம் ரூபாயும் மருத்தவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே உயிரிழந்தவர்களின் குடும்பத்தை அமைச்சர் பொன்முடி, செஞ்சி மஸ்தான் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர். மேலும் இது தொடர்பாக 4 அரசு அதிகாரிகளையும் டிஜிபி சைலேந்திர பாபு தற்காலிக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Also Read
-
90% நிறைவடைந்த முதல்வர் விஜய் அறை மாற்ற வேலை : புதிய டெண்டர் விட்ட அரசு... சர்ச்சையில் பொதுப்பணித்துறை!
-
“திருவொற்றியூரில் மாணவர் கொலை.. கோமாளி சர்க்கார் மீது பயமில்லை” : உதயநிதி ஸ்டாலின் காட்டம்!
-
‘தவெக-வால் கட்டமைக்கப்பட்ட பொய்.. அமைச்சர் மரிய வில்சனால் அம்பலப்படும் விஜய்’ : முரசொலி விமர்சனம்!
-
தவெக அரசின் முதலீட்டாளர்கள் கூட்டம்.. திமுக முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவின் 5 கேள்விகள்!
-
‘தூய சக்தி ஆட்சியில் போதை சக்திகளின் நடமாட்டம்.. கொடூர ஆட்சிக்கு கோவையே சாட்சி’ : முரசொலி விமர்சனம்!