Tamilnadu

உஷார்.. உடலை கட்டுக்கோப்பாக வைக்க தீவிர Workout.. டயட்.. 30 வயது ஜிம் பாடி பில்டருக்கு நேர்ந்த சோகம் !

அண்மைக்காலமாக உடற்பயிற்சி மேற்கொள்ளும்போதே பலரும் உயிரிழந்து வரும் செய்திகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 2021-ம் ஆண்டும் கன்னட சூப்பர் ஸ்டாராக கருதப்படும் புனித் ராஜ்குமாரும் ஜிம்மில் பயிற்சி மேற்கொள்ளும்போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

அதன்பிறகு இளைஞர்கள், நடு வயதுடையோர், ஜிம் மாஸ்டர் என பலரும் உயிரிழந்து வரும் செய்திகள் வெளியாகி வருகிறது. கடந்த ஜனவரி மாதம் மத்திய பிரதேசத்தில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் போது மயங்கி விழுந்து ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதோடு கடந்த மார்ச் மாதம் சென்னை ஆவடியில் உள்ள 24 வயதுடைய ஆகாஷ் என்ற இளைஞர் இரத்த வாந்தி எடுத்து உயிரிழந்தார்.

ஆவடி - ஆகாஷ்

ஆகாஷ், அதிக அளவிலான ஸ்டெராய்டு ஊசி எடுத்துக்கொண்டதால், அவரது 2 கிட்னிகளும் செயலிழந்தது அவரது மரணத்துக்கு காரணம் என தெரியவந்தது. தொடர்ந்து இதுபோல் இறப்பு சம்பவங்கள் நிகழ்ந்து வரும் நிலையில் தற்போது திருவள்ளூரிலும் இளைஞர் ஒருவர் உடற்பயிற்சி செய்யும்போது உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் - அஜித்

கடந்த மாதம் திருவள்ளூரை சேர்ந்த 24 வயது அஜித் என்ற இளைஞர் உடற்பயிற்சி செய்யும்போது மாரடைப்பு ஏற்பட்டு சுருண்டு விழுந்து உயிரிழந்தார். இப்படியே தொடர் சம்பவங்கள் நடைபெற்று வரும் சூழலில் தற்போது கோவையில் 30 வயது இளைஞர் ஒருவர் உடற்பயிற்சி மேற்கொள்ளும்போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

கோவை மாவட்டம் மணியகாரன்பாளையம் ரவீந்திரநாத் தாகூர் சாலையைச் சேர்ந்தவர் பி.தினகர். 30 வயது இளைஞரான இவர், தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள உள்ளூர் ஜிம் ஒன்றில் உடற்பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார். மேலும் உடலை பேணுவதற்காக இறைச்சி வகை உணவுகளை உண்ணக்கூடிய டயட் முறையை பின்பற்றி வந்துள்ளார். மேலும் சில புரோட்டீன் மாத்திரைகளை உண்டு வந்துள்ளார்.

அந்த வகையில் கடந்த வியாழக்கிழமை வழக்கம் போலச் சாப்பிட்டுவிட்டு, மாத்திரைகளை எடுத்துள்ளார். இதையடுத்து அவருக்கு திடீரென வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது தந்தை, இளைஞர் தினகருக்கு அருகே உள்ள மருந்துக் கடையில் இருந்து மருந்து வாங்கி கொடுத்துள்ளார். இருப்பினும் அது வேலை செய்யாமல் தொடர்ந்து வயிறு வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் pain killer (வலி நிவாரணி) மாத்திரையும் உண்டுள்ளார்.

தொடர்ந்து மாத்திரைகளை சாப்பிட்டே வந்ததால் அவரது உடல்நிலை மிகவும் மோசமாக காணப்பட்டுள்ளது. மேலும் பேச்சு மூச்சின்றி கிடந்துள்ளார். இதனால் பயந்து போன பெற்றோர், உறவினர் உதவியுடன் அருகில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள், உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: படகில் வைத்து சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை.. உறவுக்காரரை நம்பி சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை !