Tamilnadu

”வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்காதவர்களுக்கும் சேர்த்துதான் இந்த ஆட்சி”.. முதலமைச்சர் உறுதி!

அ.தி.மு.க ஆட்சியில் தமிழ்நாடு 10 ஆண்டுகள் இருண்டு கிடந்தது. இதையடுத்து 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதில் தி.மு.க மட்டும் 133 தொகுதிகளில் வரலாற்று வெற்றி பெற்றது.

இதையடுத்து மே 7ம் தேதி தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றுக்கொண்டார். அன்றைய தினமே மகளிருக்குக் கட்டணமில்லா பேருந்து பயணம் கோப்பில் கையெழுத்திட்டார். இந்நிலையில் தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்து இன்றுடன் இரண்டாம் ஆண்டை நிறைவு செய்து மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

இந்த இரண்டு ஆண்டில் எல்லோருக்கும் எல்லாம் என்ற திராவிட மாடல் கொள்கையின் அடிப்படையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறது. மேலும் இந்தியாவிற்கே வழிகாட்டியும் வருகிறது. பல்வேறு மாநில முதலமைச்சர்களும் திராவிட மாடல் அரசின் திட்டங்களை பார்த்து தங்களது மாநிலத்தில் அதேபோல் செயல்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்து இன்றுடன் இரண்டாம் ஆண்டை நிறைவு செய்து மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதை யொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை மெரினாவில் உள்ள பேரறிஞர் அண்ணா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர் நினைவிடங்களில் முதலமைச்சர் மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "திராவிட மாடல் ஆட்சி குறித்த விமர்சனங்கள் பற்றி நான் கவலைப்படவில்லை. நல்லதை எடுத்துக் கொள்வேன். கெட்டதைப் புறம் தள்ளுவேன்.

இந்த ஆட்சி எங்களுக்கு வாக்களித்தவர்களுக்கு மட்டும் அல்லாமல், வாக்களிக்காதவர்களுக்குமான ஆட்சியாகத்தான் உள்ளது. இந்த ஆட்சிக்கு இரண்டு ஆண்டுகள் எப்படி ஒத்துழைப்பு வழங்கினீர்களோ அதேபோல் தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளுக்கும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்" என தெரிவித்தார்.

Also Read: ”சாதியால் மதத்தால் பிரித்துப் பார்ப்பவர்களுக்கு திராவிட மாடல் புரியாது” : முதலமைச்சர் ஆவேச பேச்சு!