Tamilnadu

பாஜகவினரை அடித்து விரட்டிய இந்து மக்கள் கட்சியினர்.. உள்ளாடையுடன் ஓடிய பாஜக மாவட்ட தலைவர் !

பிரதமர் மோடியின் மனதின் குரல் நூறாவது வார நிகழ்ச்சி, திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பாஜக சார்பில் நடைபெற்றது. இந்த நிகழ்வை குறித்து இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் ஈஸ்வரன் என்பவர் சமூக வலைதளங்களில் தவறாக விமர்சனம் செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பாஜக மாவட்ட தலைவர் மங்களம் ரவி, 10 பேருடன் சென்று இந்து மக்கள் கட்சி நிர்வாகியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் அங்கு இருதரப்புக்கும் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த வாக்குவாதம் ஒருகட்டத்தில் அடிதடியாக மாறியுள்ளது. இதில் முதலில் பாஜகவினர் தாக்கத்தொடங்கியதாக கூறப்படும் நிலையில், அங்கிருந்த இந்து மக்கள் கட்சி நிர்வாகிகளும் பாஜகவினரை தாக்கியுள்ளனர்.

இது குறித்து தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்த முயன்றனர். இருப்பினும் அவர்கள் ஒருவரையொருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர். இருதரப்பினரும் தொடர்ந்து மாறி மாறி தாக்கிக் கொண்டதில் சிலர் படுகாயம் அடைந்தனர்.

இதில் இந்து மக்கள் கட்சியினரின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் பாஜகவினர் அங்கிருந்து தலைதெறிக்க அந்த இடத்தில் இருந்து ஓடியுள்ளனர். மேலும், மாவட்ட தலைவர் மங்களம் ரவி, தப்பித்தால் போதும் என உள்ளாடையுடன் தலைதெறிக்க ஓடிய சிசிடிவி காட்சிகளும் இணையத்தில் வெளியாகியுள்ளது.

இந்த தாக்குதலில் இரு தரப்பினரும் தங்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக கூறி தாராபுரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை எடுத்துக் கொண்டனர். அதோடு அடுத்த தரப்பினர்தான் தங்களை தாக்கியதாகவும் இரு தரப்பினரும் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்தால் மீண்டும் அம்பலமான பா.ஜ.க.வின் உண்மை முகம் -முரசொலி விமர்சனம் !