Tamilnadu

கொதிக்கும் ரச அண்டாவில் தவறி விழுந்த இளைஞர்.. Part Time-ஆக கேட்டரிங் வேலை செய்யும் இடத்தில் சோகம் !

திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு புதுநகர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ். 21 வயது இளைஞரான இவர், அந்த பகுதியில் அமைந்துள்ள தனியார் கலைக் கல்லூரியில் BCA 3-ம் ஆண்டு படித்து வந்தார். நடுத்தர குடும்பத்தை சேர்ந்த இவர், படித்துக் கொண்டிருக்கும்போதே பார்ட் டைம் வேலையும் செய்து வந்துள்ளார். அதன்படி திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் முக்கிய பங்கு வகிக்கும் கேட்டரிங் வேலை செய்து வந்துள்ளார்.

இந்த சூழலில் கடந்த 23 ஆம் தேதி மீஞ்சூரில் அமைந்திருக்கும் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றுக்கு கேட்டரிங் சர்வீஸ் செய்ய சென்றுள்ளார். அங்கே உணவு பரிமாற சென்றபோது, உணவு பாத்திரங்களை எடுத்து வைத்து கொண்டிருந்தார். அப்போது திடீரென அவரது கால் இடறி, அருகில் அடுப்பில் கொதித்து கொண்டிருந்த ரச பாத்திரத்தில் விழுந்துள்ளார்.

இந்த சத்தத்தை கேட்டு வந்த நண்பர்கள், அக்கம்பக்கத்தினர் உட்பட அனைவரும் அவரை உடனடியாக மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே அவரை சோதித்தபோது அவருக்கு வயிறு, தொடை உள்ளிட்ட பகுதிகள் கடும் காயம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு அங்கே தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் இளைஞர் சதீஷ் சிகிச்சை பலனின்றி கடந்த 28-ம் தேதி காலை பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடலை உடற்கூறாய்வு செய்யப்பட்டு குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பார்ட் டைம் வேலையாக கேட்டரிங் வேலை பார்த்து வந்த 20 வயது இளைஞர் ஒருவர், கொதிக்கும் ரசத்தில் தவறி விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: கல்லூரி ஆண்டு விழாவில் திடீரென வெடித்த மோதல்.. மாணவனை கத்தியால் குத்திய சக மாணவன்.. என்ன நடந்தது ?