Tamilnadu

ஜூன் 5ல் கிண்டி பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை திறப்பு: கலைஞர் நூற்றாண்டு விழாவில் குடியரசுத் தலைவர்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (28.4.2023) இந்திய குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு அவர்களை குடியரசுத் தலைவர் மாளிகையில் சந்தித்து, சென்னை, கிண்டியில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை திறந்து, கலைஞர் நூற்றாண்டு விழாவிலும் பங்கற்க அழைப்பு விடுத்தார்.

முன்னதாக, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 97-வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் “சென்னை பெருநகரத்தில் உள்ள கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை ஒன்று அமைக்கப்படும்” என‌ 3.06.2021 அன்று அறிவித்தார்.

சென்னை, கிண்டியில் உள்ள கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் 1000 படுக்கைகளுடன் கூடிய, சுமார் 51,429 சதுரமீட்டர் பரப்பளவில் தரைத்தளம் மற்றும் 6 மேல் தளங்களுடன் 230 கோடி ரூபாய் செலவில் இப்பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.

இம்மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த நிலையிலும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு தொடக்க விழாவினையொட்டியும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்திய குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு அவர்களை மேற்கண்ட விழாக்களில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அழைப்பினை ஏற்று மாண்புமிகு இந்திய குடியரசுத் தலைவர் அவர்கள் 5.5.2023 அன்று சென்னை, கிண்டியில் அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை திறப்பு விழா மற்றும் நந்தனம், ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறவுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு தொடக்க விழா ஆகியவற்றில் கலந்து கொள்ள இசைவளித்துள்ளார்

Also Read: ”மக்களோடு பழகி அவர்களின் தேவை அறிந்து செயலாற்றுங்கள்” -அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை !