Tamilnadu

“39,000 அடி உயரம்.. நடுவானில் அலறிய பயணிகள்?” : உடனடி உதவியில் இறங்கிய சென்னை ஏர்போர்ட் - நடந்தது என்ன?

கத்தார் நாட்டு தலைநகர் தோகாவிலிருந்து கத்தார் ஏர்லைன்ஸ் பயணிகள் விமான ம், இந்தோனேசிய நாட்டின் தலைநகர் ஜெகர்த்தா நோக்கி நேற்று பிற்பகல் சென்று கொண்டிருந்தது. அந்த விமானத்தில் 356 பயணிகள் 12 விமான ஊழியர்கள் உட்பட 368 பேர் பயணித்துக் கொண்டு இருந்தனர்.

விமானம் சுமார் 39 ஆயிரம் அடி உயரத்தில், நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, திடீரென விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதை அடுத்து விமானியும், விமானப் பொறியாளர்களும், நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில், தொழில்நுட்பக் கோளாறை சரி செய்ய முயற்சித்தனர். ஆனால் முடியவில்லை.

இதை அடுத்து விமானி, ஏதாவது ஒரு விமான நிலையத்தில் விமானத்தை தரை இறக்கி, தொழில் நுட்ப கோளாறை சரி செய்வது மீண்டும், வானில் பறப்பது நல்லது என்று கருதினார். எனவே விமானி அருகே உள்ள சர்வதேச விமான நிலையத்தில், விமானத்தை அவசரமாக தரை இறக்க முடிவு செய்தார். இப்போது சென்னை விமான நிலையம் அருகே இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து விமானி, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையுடன் அவசரமாக தொடர்பு கொண்டு, விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானத்தை தரையிறக்க, அனுமதி கேட்டார். உடனே சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், டெல்லியில் உள்ள தலைமை கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்டனர். அவர்கள் விமானத்தை சென்னையில் தரை இறக்க அனுமதிப்பதோடு, விமானத்தை பழுது பார்க்க தேவையான உதவிகளை செய்யும்படியும் கூறினர்.

இதை அடுத்து அந்த விமானம் நேற்று மாலை சென்னை சர்வதேச விமான நிலையத்தில், அவசரமாக தரையிறங்கியது. பயணிகள் அனைவரும் விமானத்திலேயே அமர வைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு தேவையான உணவு, போன்றவைகளை, சென்னையில் உள்ள கத்தார் ஏர்லைன்ஸ் நிறுவன நிறுவனம் ஏற்பாடு செய்தது. அதோடு விமானத்தின் தொழில்நுட்ப கோளாறை, விமான பொறியாளர்கள் குழுவினர், சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.

சுமார் 6 மணி நேரத்திற்கு மேலாக பழுது பார்க்கும் பணிகள் நடந்தது. அதன் பின்பு விமானம் நேற்று இரவு, சென்னையில் இருந்து இந்தோனேசிய தலைநகர் ஜெகத்ராவுக்கு புறப்பட்டு சென்றது. விமானத்தில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்ப கோளாறை, விமானி தகுந்த நேரத்தில் கண்டுபிடித்து, உடனடியாக எடுத்த நடவடிக்கையால், பெரும் அசம்பாவித சம்பவம் தவிர்க்கப்பட்டு, 368 பேர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.

ஏற்கனவே கடந்த ஞாயிறு அன்று, சென்னையில் இருந்து கத்தார் நாட்டு தலைநகர் தோகா சென்ற கத்தார் ஏர்லைன்ஸ் விமானம், இயந்திர கோளாறு காரணமாக, சென்னையில் ஓடுபாதையிலே அவசரமாக நிறுத்தப்பட்டது. அந்த விமானம் மறுநாள் திங்கட்கிழமை காலை தான், சென்னையில் இருந்து மீண்டும் தோகா புறப்பட்டு சென்றது.

அதே ஏர்லைன்ஸ் மற்றொரு விமானம் மீண்டும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக, திங்கள் கிழமை சென்னையில் தரையிறங்கிய அவசரமாக தரை இறங்கியது. அடுத்தடுத்து ஒரே ஏர்லைன்ஸ் விமானங்கள், இயந்திர கோளாறு காரணமாக சென்னையில் அவசரமாக தரை இறங்கிய சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Also Read: 68 கோடி இழப்பு; 50 கோடி முறைகேடு.. அதிமுக ஆட்சியின் குளறுபடிகளை பட்டியலிட்ட CAG: கூண்டோடு சிக்கிய அதிமுக!