Tamilnadu

”இதை எல்லாம் இன்னும் மக்கள் மறக்கவில்லை”.. பழனிசாமிக்கு நினைவூட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (20.4.2023) சட்டமன்றப் பேரவையில், கோயம்புத்தூர் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அளித்த பதில்:-

பேரவைத் தலைவர் அவர்களே, எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் வரிசையாக சில சம்பவங்களையெல்லாம் இங்கே பட்டியல் போட்டு காட்டியிருக்கிறார். ஆனால், பட்டியல் போட்டு காட்டிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை என்று சொன்னால் அதுதான் மிகப்பெரிய குற்றச்சாட்டு. ஆனால், இந்த சம்பவங்கள் நடந்த உடனுக்குடன் நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கக்கூடிய ஆட்சி, திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆட்சி.

Sterlite துப்பாக்கிச் சூடு நடந்தபோது, எனக்கு அந்த செய்தியே தெரியாது, தொலைக்காட்சி பார்த்துதான் தெரிந்துகொண்டேன். அதுபோன்று நாங்கள் சொல்லவில்லை. கோயம்புத்தூரைப்பற்றி சொன்னார். கோயம்புத்தூரில் நீதிமன்ற வளாகத்தில் 13-2-2023 அன்று சில ரௌடிகள், கோகுல் என்பவரை ஆயுதங்களால் தாக்கிய சம்பவத்தைக் குறிப்பிட்டு, பட்டப் பகலில் நீதிமன்றத்தில் அரங்கேறிய சில சம்பவங்களைக் குறிப்பிட்டுச் சொன்னார்.

கோயம்புத்தூர் மாநகரம், சரவணம்பட்டி காவல் நிலைய கொலை வழக்கு ஒன்றில், தொடர்புடைய கீரநத்தம் பகுதியைச் சார்ந்த கோகுல், வயது 23 வீரப்பிள்ளை என்பவர் கடந்த 13-2-2023 அன்று ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வைத்து கைது செய்யப்பட்டது தொடர்பாக, பந்தயச் சாலை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவ்வழக்கில் தொடர்புடைய 16 நபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களுள் 12 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நீதிமன்ற வளாகம் அருகே பாதுகாப்பு குறைபாடு காரணமாக இச்சம்பவம் நடைபெறவில்லை. கடந்த 13-2-2023 அன்று நடைபெற்ற கோகுல் கொலை சம்பவம் முன்விரோதம் காரணமாக நடைபெற்ற சம்பவம்.

அதேபோல, அ.தி.மு.க. ஆட்சியில் சென்னை எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் கல்லால் அடித்தே வழக்கறிஞர் ஸ்டாலின் என்பவர் கொல்லப்பட்டார். இன்னொரு வழக்கில், ரஜினிகாந்த் என்பவர் வெட்டிக் கொல்லப்பட்டார். எல்லாவற்றுக்கும் மேலாக சென்னை 5-வது பெருநகர Magistrate நீதிமன்ற விசாரணைக்காக, காத்திருந்த சலீம்பாபு என்பவர் விரட்டி வெட்டப்பட்டு, நீதிமன்ற நடுவர் முன்பே கொல்லப்பட்டார்.

டாக்டர் சுப்பிரமணிய சுவாமிக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் நடத்திக் காட்டிய வன்முறை மற்றும் ஆபாச காட்சிகளை எல்லாம் மக்கள் இன்னும் மறக்கவில்லை. அதையும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள். ஆனால், தி.மு.க. ஆட்சியைப் பொறுத்தவரைக்கும் எங்கெங்கு சம்பவங்கள் நடக்கின்றதோ, அது ஆளுங்கட்சியாக இருந்தாலும் சரி, எந்தக் கட்சியாக இருந்தாலும் சரி, அவர்கள்மீது, உடனடியாக, உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு, கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

இதற்கெல்லாம் ஆதாரங்கள் இருக்கின்றன. அந்த விவரங்களையெல்லாம் நாளையதினம் எனது பதிலுரையில் நான் விளக்கமாக சொல்ல இருக்கிறேன். மேலும், எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் மேலும் சொன்ன சில குற்றச்சாட்டுகளுக்கு எல்லாம் நாளையதினம் விளக்கமாக, நான் நிச்சயமாக பதில் சொல்வேன் என்று உறுதியளிக்கிறேன்.

Also Read: ”திராவிட மாடல் ஆட்சியில் அமைதிப் பூங்காவாக இருக்கும் தமிழ்நாடு” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!