Tamilnadu
”ஆதாரம் இல்லாமல் பேசக்கூடாது”.. பேரவையில் பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (20.4.2023) சட்டமன்றப் பேரவையில், அம்பாசமுத்திரம் நிகழ்வு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அளித்த பதில்:-
பேரவைத் தலைவர் அவர்களே, எதிர்க்கட்சித் தலைவர் பல்வேறு கோரிக்கைகளையும் வைத்திருக்கிறார்கள்; பல்வேறு குற்றச்சாட்டுகளையும் எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். அவற்றிற்கெல்லாம் நான் நாளைக் காலையில் பதிலுரையாற்றவிருக்கிறேன். ஒருவேளை அவர்கள் வெளிநடப்புச் செய்யாமல் இந்த அவையில் இருந்தால், அப்பொழுது கேட்கலாம்.
இருந்தாலும், திருநெல்வேலி, அம்பாசமுத்திரத்தில் நடைபெற்ற ஒரு சம்பவத்தைப் பற்றி குறிப்பிட்டு, காவல் துறை அதிகாரி, பல்வீர்சிங் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டை, இந்த அரசின்மீது எதிர்க்கட்சித் தலைவர் (குறுக்கீடு) சரி, CCTV கேமராக்கள் சரியாக இயங்கவில்லை என்ற செய்தி வந்ததாக, அதையும் உறுதி செய்து சொல்லவில்லை; செய்தி வந்ததாக என்றுதான் சொல்லியிருக்கிறார்கள். அதற்காக, நான் ஒரு விளக்கத்தைச் சொல்ல விரும்புகிறேன்.
அம்பாசமுத்திரம் நிகழ்வு குறித்து சமூக வலைதளங்களில் புகார்கள் வந்தவுடனே அங்கு பணியாற்றிய உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர்சிங் 26-3-2023 அன்று காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டிருக்கிறார்.
அதைத் தொடர்ந்து PSO பிரிவு 151-ன் இந்த புகார் நிர்வாகத் துறை நடுவர் (Executive Magistrate) மற்றும் சார் ஆட்சியர் சேரன்மாதேவி ஆகியோர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
இதற்கிடையில் உதவி காவல் கண்காணிப்பாளர் 29-3-2023 அன்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் இந்த நிகழ்வு தொடர்பாக ஓர் உயர் அதிகாரி தலைமையில் விசாரணைக்கு உத்தரவிடப் பரிந்துரைத்ததன் அடிப்படையில், பெ. அமுதா, இ.ஆ.ப., அவர்கள் உயர்மட்ட விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இதற்கிடையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர்சிங் மீது 17-4-2023 அன்று குற்ற வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
உயர்மட்ட விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்ட அமுதா, I.A.S., 4 நாட்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் முகாமிட்டு நடத்திய விசாரணையின் அடிப்படையில், CCTV Camera-வில் பதிவாகியிருக்கக்கூடிய ஆதாரங்களை எல்லாம் அடிப்படையாகக் கொண்டு, நேற்றையதினம் ஓர் இடைக்கால அறிக்கையை அரசிற்கு சமர்ப்பித்திருக்கிறார். அவரது அறிக்கையின் அடிப்படையில் தான், நேற்றிரவு CBCID விசாரணைக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டிருக்கிறது என்பதை எதிர்க்கட்சித் தலைவர் அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் நான் விளக்கிட விரும்புகிறேன்.
Also Read
-
551 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பாட்டா... 5,000 மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி முதலமைச்சர் அசத்தல்!
-
எரிவாயு தட்டுப்பாட்டை சமாளிக்க அதிரடி நடவடிக்கை - சிறப்பு முயற்சிகள் எடுத்த திராவிட மாடல் அரசு!
-
“நெல் சாகுபடியில் சாதனை... நெல் கொள்முதல் இலக்கினை உயர்த்த வேண்டும்” : பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்!
-
5 ஆண்டுகளில் TNPSC, தேசிய நலவாழ்வு குழுமம் மூலம் 48,418 பேருக்கு பணி ஆணை:அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
-
அரசுக் கல்லூரிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட 5 உதவிப் பேராசிரியர்கள் : பணி ஆணைகளை வழங்கிய முதலமைச்சர்!