Tamilnadu

“சமூகநீதிக் காவலர் வி.பி.சிங்கிற்கு கம்பீரச் சிலை.. வாழ்நாளில் கிடைத்த அறிய வாய்ப்பு” : முதலமைச்சர் உரை!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 110 விதியின் கீழ் முக்கிய அறிவிப்பை ஒன்றை வெளியிட்டார்.

இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை பின்வருமாறு :- “சமூகநீதிக் காவலர் - இந்தியா முழுமைக்கும் பிற்படுத்தப்பட்ட மக்களின் பிதாமகர் - மறைந்த வி.பி.சிங் அவர்களுக்கு இந்த திராவிட மாடல் அரசு மரியாதை செய்ய நினைக்கும் மகத்தான அறிவிப்பை இந்த மாமன்றத்தில் வழங்குவதற்காக உங்கள் முன்னால் நிற்கிறேன்.

உத்தரப்பிரதேச மாநிலம் அகமதாபாத் மாவட்டத்தில் மிகப்பெரிய ஜமீன்தாரரான ராஜா தயா பகவதி பிரதாப் சிங் அவர்களுக்கு மகனாகப் பிறந்தவர் தான் வி.பி.சிங் என்று அழைக்கப்படும் விஸ்வநாத் பிரதாப் சிங் அவர்கள். ஆடம்பர வாழ்க்கை வாய்த்தாலும் அதில் மனம் ஒட்டாமல் கல்லூரி படிக்கும் காலத்தில் காந்திய இயக்கத்தில் ஈடுபட்டார். சர்வோதய சமாஜில் இணைந்தார். பூமிதான இயக்கத்தில் பங்கெடுத்தார். தனது நிலங்களையே தானமாக வழங்கினார். 1969 ஆம் ஆண்டு உத்திரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் நின்று வென்றார்.

* உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதலமைச்சர்

* இந்திய ஒன்றியத்தில் வர்த்தக அமைச்சர், நிதி அமைச்சர், பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆகிய உயர் பதவிகளை வகித்தார்.

* தேசிய முன்னணியை உருவாக்கி 1989 ஆம் ஆண்டு இந்தியாவின் பிரதமராகவே ஆனார்.

மாண்புமிகு வி.பி.சிங் அவர்கள் பிரதமராக இருந்தது பதினோரு மாதங்கள் தான் என்றாலும் - அவர் செய்த சாதனை என்பது மகத்தானவை. அதனால் தான் அவரை இந்த மன்றத்தில் இப்போதும் போற்றிக் கொண்டு இருக்கிறோம்.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டபோது பட்டியலின - பழங்குடியினருக்கு ஒன்றிய அரசு பணியிடங்களில் தனி இடஒதுக்கீடு தரப்பட்டது. ஆனால் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அவர்களது மக்கள் தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீடு தரப்படவில்லை. இதனை வழங்குவதற்காக அமைக்கப்பட்ட இரண்டாவது பிறபடுத்தப்பட்டோர் ஆணையம் தான் பி.பி.மண்டல் தலைமையிலான ஆணையம் ஆகும்.

சமூகரீதியாகவும் - கல்வியிலும் பின் தங்கிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்று அழைக்கப்படும் சமூகத்துக்கு ஒன்றிய அரசுப் பணியிடங்களில் 27 சதவிகித இடஒதுக்கீட்டை வழங்கலாம் - என்ற பி.பி.மண்டல் பரிந்துரையின் உத்தரவை அமல் படுத்திய சமூகநீதிக் காவலர் தான் வி.பி.சிங் அவர்கள்.

அவர் பிறப்பால் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் அல்ல - ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்தவரும் அல்ல. ஆனாலும் செய்து காட்டியவர் வி.பி.சிங் அவர்கள். மண்டல் ஆணையத்தின் பரிந்துரையை அமல்படுத்தப் போகிறேன் என்று ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் வி.பி.சிங் அறிவித்தபோது, 'முற்பட்ட ஜாதியைச் சேர்ந்த ஒருவரால் இதனைச் செய்ய முடியாது' என்று அமைச்சர் ஒருவரே சொன்ன போது, 'இதோ... இப்போதே தேதியைச் சொல்கிறேன்' என்று கம்பீரத்துக்குச் சொந்தக்காரர் வி.பி.சிங் அவர்கள்.

அதுதான் அவரது பதவிக்கே நெருக்கடியாக அமைந்தது. 'சில நேரங்களில் வாழ்வதைக் காட்டிலும் மரணத்தைத் தேர்ந்தெடுப்பதே நல்லது' என்று சொல்லி பிரதமர் பதவியை விட்டு விலகியவர் சுயமரியாதைச் சுடரொளி வி.பி.சிங் அவர்கள். 'வி.பி.சிங்கை தூக்கில் கூடப் போட்டுக் கொள்ளுங்கள். ஆபால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான நீதியைக் கொடுங்கள்' பதவியில் இருந்த பதினோறு மாத காலத்தில்

* பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 சதவிகித இடஒதுக்கீடு

* தகவல் அறியும் உரிமைச் சட்டத்துக்காக தொடக்கப்புள்ளி

* தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்துக்கான தொடக்கப்புள்ளி

* வேலை உரிமையை அரசியல் சாசன உரிமை ஆக்கியது

* தேர்தல் சீர்திருத்தங்கள்

* மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சில்

* தேசிய பாதுகாப்புக் குழு

* விவசாயிகள் பிரச்னையை தீர்க்க மூன்று குழுக்கள்

* டெல்லி குடிசைப்பகுதி மக்களுக்கு வாழ்விடங்கள்

* அதிகபட்ச சில்லறை விற்பனை விலை( MRP) அச்சிடவேண்டும்.

* நுகர்வோர் பாதுகாப்பு - ஆகியவை அனைத்தையும் செய்து காட்டி மாபெரும் சாதனையாளர் தான் வி.பி.சிங் அவர்கள் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அதனை தனது ரத்த சொந்தங்கள் வாழும் மாநிலமாக வி.பி.சிங் அவர்கள் நினைத்தார்கள்.

தந்தைப் பெரியாரை தனது உயிரினும் மேலான தலைவராக வி.பி.சிங் அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். 'ஒரு மனிதனுக்குச் சாவைவிட மிகக் கொடுமையானது 'அவமானம்'. அந்த அவமானத்தைத் துடைக்கும் மருந்துதான் பெரியாரின் 'சுயமரியாதை' என்று சொன்னவர் வி.பி.சிங் அவர்கள்.

தலைவர் கலைஞர் அவரகளை சொந்த சகோதரனைப் போல மதித்தார். '' எனக்கு நெருக்கடி ஏற்படும் போதெல்லாம் என் பக்கத்தில் இருந்து கலைஞர் அவர்கள் என்னை உற்சாகப்படுத்திக் கொண்டே இருந்தார். தனது ஆட்சியைப் பற்றிக் கூட பொருட்படுத்தாமல் ஒரு கொள்கைக்காக - இலட்சியத்துக்காக என்னோடு இருந்த மாபெரும் தலைவர் கலைஞர் '' என்று பாராட்டியவர் வி.பி.சிங் அவர்கள்.

1988 ஆம் ஆண்டு தேசிய முன்னணி தொடக்கவிழா சென்னையில் நடைபெற்ற போது ஒருங்கிணைக்கப்பட்ட மாபெரும் ஊர்வலத்தை தலைமை தாங்கி நான் நடத்தி வந்தேன். பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் வெள்ளுடை தரிந்து அணிவகுத்த வீரக் காட்சியை மேடையில் இருந்தபடி பார்த்து வணங்கினார் வி.பி.சிங் அவர்கள்.

பின்னர் அவர் பிரதமர் ஆனபோது, டெல்லி சென்று நாங்கள் குழுவாகச் சந்தித்தபோது - 'உங்களை நன்கு தெரியுமே! நீங்கள் தானே இளைஞர் படையை அணிவகுத்து வந்தது!" என்று பிரதமர் வி.பி.சிங் பாராட்டியது என் வாழ்நாளில் கிடைத்தற்கரிய வாய்ப்பு ஆகும். அத்தகைய சமூகநீதிக் காவலர் அளித்த ஊக்கத்தின் உற்சாகத்தின் காரணமாகத்தான் சமூகநீதிப் பார்வையில் - சமூகநீதிப் பயணத்தில் கொஞ்சமும் சலனமும் - சமரசமும் இல்லாமல் இந்த அரசு செயல்பட்டு வருகிறது.

மருத்துவப் படிப்பில் அகில இந்திய தொகுப்பு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்பதற்காக சென்னை உயர்நீதிமன்றத்திலும் - உச்சநீதிமன்றத்திலும் திமுக போராடியதை அதிகம் நான் விளக்கத் தேவையில்லை. இடஒதுக்கீடே கிடையாது என்று சொல்லி வந்த ஒன்றிய அரசை - 27 சதவிகித இடஒதுக்கீடுக்கு ஒப்புக்கொள்ள வைத்தது திமுக உள்ளிட்ட ஜனநாயக சக்திகள் நடத்திய போராட்டங்களால் தான்.

அதனை மனதில் வைத்துத்தான் அகில இந்திய அளவில் சமூகநீதிக்கான கூட்டமைப்பை உருவாக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறோம். அதற்கான முதல் கூட்டமானது காணொலி மூலமாக நடந்துள்ளது. அகில இந்திய அளவில் பெரும்பாலான கட்சிகள் அதில் பங்கெடுத்தன. அகில இந்தியாவுக்கே தமிழ்நாடு தான் வழிகாட்ட வேண்டும் என்று அக்கட்சிகள் அறைகூவல் விடுத்துள்ளன. தமிழ்நாட்டின் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக மட்டுமல்ல - இந்தியா முழுமைக்குமான அனைத்து மக்களுக்காகவும் குரல் கொடுத்து வருகிறோம்.

சி. ஆர். பி. எப். தேர்வானது இந்தி, ஆங்கிலத்தில் மட்டும் தான் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் நடத்த வேண்டும் என்று உள்துறை அமைச்சருக்கு நான் கடிதம் அனுப்பி வைத்தேன். திமுக மாணவரணியும், இளைஞரணியும் மிகப்பெரிய ஆர்ப்பாட்ட அறிவிப்பைச் செய்தார்கள். தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் சி.ஆர்.பி.எப். தேர்வு நடைபெறும் என்ற வெற்றிச் செய்தி கிடைத்திருக்கிறது.

அனைத்து வகையிலும் சமூகநீதியை நிலைநாட்டும் அரசாக இந்த அரசு செயல்பட்டு வருகிறது. இத்தகைய கொள்கை உரத்தை வழங்கியவர்களில் ஒருவர் வி.பி.சிங் அவர்கள் என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது. தமிழ்நாட்டு மக்களின் உயிர்பிரச்னையான காவிரி நீருக்காக நடுவர் மன்ற ஆணையத்தை அமைத்துத்தந்தவர் வி.பி.சிங் அவர்கள்.

* இலங்கைப் பிரச்னைக்குத் தீர்வு காண தனது இல்லத்தில் அகில இந்தியத் தலைவர்கள் - மாநில முதலமைச்சர்கள் கூட்டத்தைக் கூட்டி ' இப்போது கலைஞர் சொல்லப் போவதுதான் என் கருத்து' என்று சொன்னவர் வி.பி.சிங் அவர்கள்.

* சென்னையில் அமைந்துள்ள உள்நாட்டு விமான முனையத்துக்கு பெருந்தலைவர் காமராசர் பெயரையும் - பன்னாட்டு விமான முனையத்துக்கு பேரறிஞர் அண்ணாவின் பெயரையும் சூட்டிய ஒப்பற்ற தலைவரான வி.பி.சிங் அவர்களின் நினைவைப் போற்றும் வகையிலும் - அவருக்கு தமிழ்ச்சமுதாயத்தின் நன்றியைத் தெரிவிக்கும் வகையிலும் சென்னை அவரது முழுவுருவக் கம்பீரச் சிலை அமைக்கப்படும் என்பதை இம்மாமன்றத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

உயர் வர்க்கத்தில் பிறந்தாலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகச் சிந்தித்த - எத்தனை உயர் பதவி வகித்தாலும் கொள்கையை விட்டுத் தராத - டயாலிசிஸ் செய்யப்பட்ட உடல்நிலையிலும் ஏழை மக்களுக்காக வீதிக்கு வந்து போராட்டம் நடத்திக் கொண்டிருந்த வி.பி.சிங் அவர்களது புகழ் வாழ்க! வாழ்க!” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: கலைஞர் நூற்றாண்டு விழா.. பேரவையில் 3 அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: அது என்ன?