Tamilnadu

மாற்றுத்திறனாளிகள் Cricket அணி கேப்டனை மிரட்டிய நடத்துநர்.. அதிரடியாக சஸ்பெண்ட் செய்த போக்குவரத்துத்துறை!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி தமிழ்நாட்டில் அமைந்த பிறகு மக்களுக்கு எந்த ஒரு இடையூறும் ஏற்பட கூடாது என்று அனைத்து துறைகளுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக போக்குவரத்து துறை சார்பில் சாதாரண மக்கள் மட்டுமின்றி, மாற்றுத்திறனாளிகளும் பயனூறும் வகையில் பல ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

இந்திய மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணியின் கேப்டன் சச்சின் சிவா

இந்த சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மாற்றுத்திறனாளியான நபர் ஒருவரை பேருந்தில் ஏற விடமால் அவதூறாக பேசியதோடு, அவருக்கு கொலை மிரட்டல் விடுத்த பேருந்து நடத்துநரை அதிரடியாக சஸ்பெண்ட் செய்து போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்திய மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருப்பவர்தான் மதுரையை சேர்ந்த சச்சின் சிவா. இவர் நேற்று இரவு மதுரைக்கு செல்வதற்காக சென்னை கோயம்பேடு நிலையத்தில் காத்துக்கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த மதுரை செல்லக்கூடிய SETC பேருந்து ஒன்றில் இவர் ஏற முற்படவே, உடனே அந்த பேருந்தின் நடத்துநர் ராஜா என்பவர் அவரை ஏற விடாமல் தடுத்துள்ளார்.

உடனே சச்சின் சிவாவும், இந்த பேருந்தில் ஏன் ஏறக்கூடாது என்று கேட்கவே, உடனே அந்த நடத்துநர் மாற்றுத்திறனாளிகள் இதில் ஏறக்கூடாது என்று சண்டையிட்டுள்ளார். மேலும் அவரை பேருந்து ஏற விடமால் வெளியிலேயே நிற்கவிட்டதோடு, முகத்தை உடைப்பேன் என்றும் கொடூரமாக மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் கோபமடைந்த சிவா, ஞாயம் கேட்டு அந்த பேருந்தின் முன் தர்ணாவில் ஈடுபட்டார். சம்பவம் அறிந்து அங்கிருந்த காவல் அதிகாரி சமரசம் பேச முயன்றபோதும் அது சரிவரவில்லை.

மாறாக அந்த பேருந்து அங்கிருந்து நகர்ந்துவிட்டது. இதையடுத்து மன வேதனையோடு சச்சின் சிவா மற்றொரு பேருந்தில் மதுரைக்குள் சென்றார். ஒரு இந்திய மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணியின் கேப்டனுக்கு பகிரங்கமாக மிரட்டல் விடுத்த பேருந்து நடத்துநர் தொடர்பான வீடியோ வெளியானது. இதனிடையே இந்த புகார் எழுந்ததையடுத்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பேருந்து நடத்துநர் ராஜாவை அதிரடியாக பணியிடை நீக்கம் செய்து போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Also Read: “பாஜகவில் இருந்தால் மரியாதை இல்லை..”-அதிரடியாக விலகிய கர்நாடக முன்னாள் முதலமைச்சர்: காங்கிரஸில் இணைந்தார்