Tamilnadu

1500 பழங்குடியின குடும்பங்களுக்கு வீடுகள்.. 25 அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் கயல்விழி செல்வராஜ்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் 25 புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

அதன் விவரம் வருமாறு:-

1. வாடகைக் கட்டடங்களில் இயங்கி வரும் 4 ஆதிதிராவிடர் மாணவர்கள் விடுதிகளுக்கு ரூ.25 கோடியில் புதிய விடுதிக் கட்டங்கள் கட்டப்படும்.

2. விடுதிகளில் ஏற்படும் சிறுபராமரிப்பு பழுதுபார்ப்பு, மாணவர்களின் மருத்துவ செலவினம் ஆகிய பணிகளை மேற்கொள்ள ரூ.7.50கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

3. சென்னை மாவட்டத்தில் உள்ள 23 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகளுக்கு ஒருங்கிணைந்த சமையலறை மூலம் சுகாதாரமான மற்றும் தரமான உணவு வழங்கும் திட்டம் ரூ.3.75 கோடியில் செயல்படுத்தப்படும்.

4. விடுதிகளில் சிறப்பு பராமரிப்பு பணிகள் மற்றும் கண்காணிப்புக் கேமரா, பயோமெட்ரிக் வருகைப் பதிவு வசதிகள் ரூ.25 கோடியில் ஏற்படுத்தப்படும்.

5. கல்லூரி விடுதிகளில் நவீன வசதிகளுடன் கூடிய கற்றல் கற்பித்தல் அறை ரூ.10 கோடியில் அமைக்கப்படும்.

6. விடுதிகளில் தங்கிக் கல்வி பயிலும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.1 கோடியில் சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும்.

7.சென்னை சமூகப் பணி கல்லூரியில் ரூ.2 கோடியில் சமூக நீதி மற்றும் சமத்துவ மையம் நிறுவப்படும்.

8. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்த புகார் அளிக்கவும் சட்ட ஆலோசனைகள் வழங்கவும் தொழில் நுட் வசதியுடன் கூடிய உதவி மையம் ஏற்படுத்தப்படும்.

9. அரசு சட்டக் கல்லூரியில் இறுதி ஆண்டு சட்டப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு internship உதவித் தொகை வழங்கப்படும்.

10. தமிழ்நாட்டில் உள்ள 37 வகையான பழங்குடியின சமூக பொருளாதார கணக்கெடுப்பு இனவரவியல் ஆய்வு பணி ரூ.3.50 கோடியில் மேற்கொள்ளப்படும்.

11. பழங்குடியினர் வசிக்கும் மலைப் பகுதிகளில் இணையதள இணைப்பு வசதி ரூ.10 கோடியில் ஏற்படுத்தப்படும்.

12. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்படும் அனைத்துத் திட்டங்களையும் கண்காணிக்க திட்ட கண்காணிப்பு அலகு ஏற்படுத்தப்படும்.

13. பழங்குடியினர் குடியிருப்புகளை நவீன கிராமங்களாக உருவாக்கப்படும்.

14. பழங்குடியின மக்களுக்கான வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டம் ரூ.10 கோடியில் மேற்கொள்ளப்படும்.

15. வீடற்ற 1500 பழங்குடியின குடும்பங்களுக்கு ரூ.45 கோடியில் வீடுகள் கட்டித்தரப்படும்.

16. தூய்மை பணியாளர்களுக்கு தூய்மைப் பணியாளர் நலவாரியம் மானியத்தின் மூலம் வீடுகள் வழங்கப்படும்.

17. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் எழுத்தாளர்களின் சிறந்த தமிழ் படைப்புகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படும்.

18. மாணவர்கள் விடுதிகளில் மன்றங்கள் அமைக்கப்படும்.

19. வெளிநாடுகளில் கல்வி பயில்வோருக்கான கல்வி உதவித் திட்டம் இரண்டு திட்டக் கூறுகளாக திருத்தி அமைக்கப்படும்.

20. பணிபுரியும் மகளிருக்கான விடுதிகளை தமிழ்நாடு பணிபுரியும் மகளிருக்கான விடுதி நிறுவனம் மூலம் ரூ.2 கோடியில் மேம்படுத்தப்படும்.

21.12ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு உயர் தொழில்நுட்பக் கல்லூரிகளில் சேர்வதற்கான நுழைவுத் தேர்விற்பான பயிற்சிகள் அளிக்கப்படும்.

22. தாட்கோ மூலம் வாழ்வாதார மேம்பாட்டிற்கான திறன் பயிற்சிகள் வழங்கப்படும்.

23. மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்படும் மானியத் தொகையை ரூ.2.50 லட்சத்தில் இருந்து ரூ.6 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.

24. மகளிர் கூட்டறவு பால் உற்பத்தியாளர் சங்கங்களை நவீனப்படுத்துதல் மற்றும் ரூ. 1.25 கோடியில் மானியம் வழங்கப்படும்.

25. தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் திருத்தி அமைக்கப்படும்.

Also Read: 4133 காலிப் பணியிடங்களுக்கு தேர்வு: 106 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன்!