Tamilnadu

சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதா.. 2வது முறையாக மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநர்: அமைச்சர் மா.சு தகவல்!

தமிழ்நாட்டில் சித்த மருத்துவம், ஆயுர்வேதா,யுனானி யோகா, ஹோமியோபதி மற்றும் இயற்கை மருத்துவம் ஆகிய துறைகளுக்கென தனி பல்கலைக்கழகம் நிறுவுவது தொடர்பான சட்ட மசோதா கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தாக்கல் செய்தார்.

இந்த மசோதாவில் சித்த மருத்துவ பல்கலைக்கழகத்தின் வேந்தராக முதலமைச்சர் இருப்பார் என்றும் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா அனைத்திற்கும் முதலமைச்சர் தலைமை வகித்து பட்டங்கள், பட்டயங்கள் அல்லது பிற கல்வி சிறப்பு பட்டங்கள் அனைத்தையும் வழங்குவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் சித்த மருத்துவக் கல்லூரிகள், யுனானி, யோகா மற்றும் இயற்கை மருத்துவம், ஹோமியோபதி மருத்துவக் கல்லூரிகள் அனைத்தும் புதிய பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் எனவும் மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்குத் தமிழ்நாடு அரசு அனுப்பிவைத்தது. ஆனால் ஆளுநர் ஒப்புதல் கொடுக்காமல் விளக்கம் கேட்டு தமிழ்நாடு அரசுக்குத் திருப்பி அனுப்பினார். இதையடுத்து தமிழ்நாடு அரசு அவருக்கு விளக்கம் கொடுத்தது.

இந்நிலையில் மீண்டும் விளக்கம் கேட்டு இரண்டாவது முறையாகச் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளதாகப் பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று நடைபெற்ற பேரவையில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "கடந்த 2021 ஆம் ஆண்டு சித்த மருத்துவ பல்கலைக்கழகத்திற்கான அறிவிப்பை முதலமைச்சர் வெளியிட்ட நிலையில், பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 4 மாதம் கிடப்பில் போட்டு விட்டு மசோதா தொடர்பாக விளக்கம் கேட்டார். பின்னர் விளக்கம் கொடுக்கப்பட்டது.

இந்நிலையில் இரண்டாவது முறையாகச் சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதா மீது விளக்கம் கேட்டுள்ளார். ஆளுநருக்கும் சித்த மருத்துவத்திற்கும் என்ன சண்டையோ தெரியவில்லை? சித்த மருத்துவ பல்கலை மசோதா தொடர்பாக விளக்கம் கேட்டு அனுப்பியுள்ளார்" என தெரிவித்துள்ளார்.

Also Read: ”ஆளுநர் விவகாரத்தில் இணைந்து செயல்படுவோம்”.. தமிழ்நாடு முதலமைச்சருக்குக் கடிதம் எழுதிய கேரள முதலமைச்சர்!