Tamilnadu

நிதி நிறுவனத்திற்குள் புகுந்து அராஜகம்.. அடியாட்களை கொண்டு ஊழியர்களைத் தாக்கிய அதிமுக ஒன்றிய செயலாளர்!

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகரில் உள்ள வேதபுரி ஈஸ்வரர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கஜேந்திரன். இவர் அ.தி.மு.க ஓன்றியச் செயலாளர் பதவியிலிருந்து வருகின்றார். மேலும் இவர் பெரிய அய்யம்பாளையம் கிராமத்தில் கல்குவாரி ஒன்றை எடுத்து நடத்தி வருகின்றார்.

இந்நிலையில் ஆரணி நகரில், காந்தி ரோட்டில் டிஎன்சி என்ற தனியார் நிதி நிறுவனம் கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இங்கு அ.தி.மு.க ஓன்றியச் செயலாளர் கஜேந்திரன் ரூ. 25 லட்சம் சீட்டுக் கட்டி வந்துள்ளார்.

இதையடுத்து இந்த சீட்டுக் கட்டுவது தொடர்பாகத் தனியார் நிதி நிறுவனத்திற்கும், கஜேந்திரனுக்கும் இடைய தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அ.தி.மு.க ஒன்றிய செயலாளர் கஜேந்திரன் தனது ஆதரவாளர்களுடன் தனியார் நிதி நிறுவனத்திற்குச் சென்று அங்கிருந்த ஊழியர்களைத் தாக்கி அராஜகமாக நடந்து கொண்டுள்ளார்.

இதுபற்றி தகவல் அறிந்து அங்கு வந்த போலிஸார் இருதரப்பினரையும் சமரசம் செய்து தனியார் நிதி நிறுவன ஊழியர்களை மீட்டனர். பின்னர் நிதி நிறுவனத்தைப் பூட்டிய போலிஸார் இந்த பிரச்சனை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தனியார் நிதி நிறுவனம் ஊழியர்களை அ.தி.மு.க ஒன்றிய செயலாளர் அடியாட்களைக் கொண்டு தாக்கிய சம்பவம் அரணி நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: 2 தமிழக பாஜக முக்கிய நிர்வாகிகளுக்கு சிக்கல்: ஆருத்ரா வழக்கில் அடுத்தக்கட்ட நடவடிக்கையில் இறங்கிய போலிஸ்!