Tamilnadu

2 குழந்தைகளை கிணற்றில் வீசி கொலை.. அதே கிணற்றில் குதித்து தாய் தற்கொலை: விசாரணையில் பகீர்!

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் அடுத்த வட்ராபுத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னராசு. இவரது மனைவி சூர்யா. இந்த தம்பதிக்கு நான்கு வயதில் லட்சுமன், ஒரு வயதில் உதயன் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவன் சின்னராசுக்கும் மனைவி சூர்யாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

பின்னர் கணவன் வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். பிறகு வீட்டிற்கு வந்தபோது குழந்தைகள் மற்றும் மனைவி இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இவர்கள் குறித்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் விசாரித்துள்ளார்.

இந்நிலையில் அப்பகுதியில் உள்ள கிணற்று அருகே சூர்யாவின் செல்போன் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சின்னராசு இது குறித்து காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

பிறகு விரைந்து வந்த கீழ்பெண்ணாத்தூர் காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் சுமார் மூன்று மணி நேரத்துக்கு மேலாகப் போராடி கிணற்றில் இருந்து மூன்று பேரிடன் உடலை மீட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், கணவன் மற்றும் மனைவிக்கு இடையே இருந்த குடும்ப தகராறு காரணமாகக் குழந்தைகளை கிணற்றில் வீசி கொலை செய்து விட்டு தாயும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

இந்த தற்கொலை சம்பவம் குறித்து போலிஸார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப தகராறு காரணமாக இரண்டு குழந்தைகளைக் கிணற்றில் வீசி தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: துப்பாக்கியால் சுட்ட 4 முறை மணமகள்.. பீதியில் உறைந்து போன மணமகன்.. மிரளவிடும் வீடியோவால் போலிசார் செக் !