Tamilnadu

காரை பின்னோக்கி வேகமாக இயக்கிய தாய்மாமா.. 2 கார்களுக்கு இடையே நசுங்கிய சிறுவன்: மருத்துவமனை வாசலில் சோகம்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ளது எண்ணமங்கலம் என்ற கிராமம். இங்கு முத்துசாமி என்பவர் குடும்பத்தோடு வசித்து வருகிறார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில் மூத்த மகன் தருண் அந்த பகுதி பள்ளி ஒன்றில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். அதேபோல் கடைசி மகன் தனீஷ் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த நிலையில் இன்று முத்துசாமியின் 2 மகன்களும், அவரது பாட்டியான ஜோதிமணியுடன் அந்தியூர் தேர் வீதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த உறவினர் ஒருவரை பார்க்க காரில் சென்றுள்ளனர். அப்போது அந்த காரை முத்துசாமியின் மைத்துனரும் சிறுவர்களின் மாமாவுமான கனகராஜ் ஓட்டி வந்துள்ளார்.

பின்னர் மருத்துவமனைக்கு சென்று 3 பேரையும் இறக்கிவிட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உறவினரை சந்திக்க உள்ளே சென்ற 3 பேரில், பாட்டியை மட்டும் விட்டுவிட்டு, சிறுவர்கள் இருவரும் வெளியே வந்துவிட்டனர். அந்த சமயத்தில் கனகராஜ் தான் வந்த காரை பின்னோக்கி இயக்கவே அப்போது வெளியே நின்றிருந்த சிறுவன் மீது மோதியது.

அந்த சமயத்தில் இந்த காருக்கும் சிறுவனுக்கும் பின்னால் இருந்த காருக்கும் இடையே சிறுவனின் உடல் நசுங்கியது. இதனை கண்ட அங்கிருந்தவர்கள் பதற்றமடைந்த ஓடி வந்து சிறுவனை தூக்கினர். பின்னர் மருத்துவமனை வாசலில் இந்த சம்பவம் நடந்ததால் உடனே அங்கேயே உள்ளே தூக்கி சென்றனர். அங்கே சிறுவனை சோதித்து பார்த்த மருத்துவர் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார்.

பின்னர் இதுகுறித்து அந்தியூர் போலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்த அவர்கள் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காரை பின்னோக்கி இயக்கும்போது சிறுவன் மீது மோதியதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே சிறுவன் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: போதையில் சாலையில் பைக்கில் சென்றவரின் தலையில் தட்டிய இளைஞர்.. எதிர்பாராத வகையில் இறுதியில் நடந்த துயரம்!