Tamilnadu

பிரதமரின் நிகழ்ச்சிக்கு வந்த பாஜகவினர் குடிபோதையில் பெண்களிடம் ரகளை.. 5 பேரை பிடித்து போலிஸார் விசாரணை!

சென்னை பல்லாவரத்தில் நிகழ்ச்சி முடிந்த பின்பு மதுபோதையில் பாஜகவைச் சேர்ந்த வாலிபர்கள் பெண்களை கிண்டல் செய்ததாக கைது செய்யபட்டதால் காவல் நிலையத்தை பாஜகவினர் முற்றுகையிட்டு காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நேற்றைய தினம் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் மோடி சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய விமான முனையம், சென்னை சென்ரல் ரயில் நிலையத்தில் வந்தே பாராத் ரயில் சேவை ஆகியவற்றை தொடங்கி வைத்தனர். பின்னர் சென்னை பல்லாவரத்தில் உள்ள திடலில் பல்வேறு அரசு திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்துச் சென்றார்.

மேலும் பிரதமர் மோடி கலந்துக்கொண்ட விழாவில் பங்கேற்க அருகில் உள்ள மாவட்டங்களைச் சேர்ந்தவர்களை பா.ஜ.கவினர் அழைத்து வந்துள்ளனர். அப்போது பிரதமர் மோடி நிகழ்ச்சியை முடிந்த பிறகு சென்றபோது, மது போதையில் இருந்த கடலூர் மாவட்டத்தை சேர்ந்த பாஜக இளைஞர்கள் சிலர் அப்பகுதியில் கூச்சலிட்டு ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் ஒரு கட்டத்தில் இளைஞர் மூன்று பேர் அங்கிருந்த பெண்களை கிண்டல் செய்துள்ளனர். இதனைக்கண்ட பாதுகாப்பு பணியில் இருந்த போலிஸார், அவர்களைப் பிடித்து பல்லாவரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்த தகவல் அறிந்து பல்லாவரம் காவல் நிலையத்தை 100க்கும் மேற்பட்ட பாஜகவினர் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு, போலிஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் தகவல் அறிந்து வந்த தாம்பரம் துணை ஆணையர் அதிவீர பாண்டியனை சுற்றி வளைத்து பாஜகவினர் ரகளையில் ஈடுபட்டனர். பின்னர் அவரே விசாரணை நடத்தி மூன்று இளைஞர்களும் சிறுவர்கள் என்பதால் அவர்களை எச்சரித்து விடுத்தனர். இந்த சம்பவத்தை அரசியலாக்க முயற்சி செய்த பா.ஜ.கவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் போலிஸாருக்கு கோரிக்கை வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Also Read: மூத்த பத்திரிகையாளரிடம் தரக்குறைவான பேச்சு.. கேள்வி கேட்ட நெறியாளர்: கத்திக்கொண்டே வெளியேறிய BJP நாராயணன்