Tamilnadu

சேற்றில் சிக்கிய அர்ச்சகரை காப்பாற்ற சென்ற 5 பேர் கோவில் குளத்தில் மூழ்கி பலி.. முதலமைச்சர் இரங்கல் !

சென்னை மடிப்பாக்கம் அடுத்த மூவரசம்பட்டு தர்மலிங்கேஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு தீர்த்தவாரி உற்சவ நிகழ்வின் போது இன்று நடைபெற்றது. அப்போது அந்த குளத்தில் கோயில் சுவாமி சிலையையும் சில அர்ச்சனை பொருட்களையும் நீரில் மூழ்கி எடுக்க அர்ச்சகர்கள் 25 பேர் குளத்தில் இறங்கினர்.

அதில் 3 முறை முங்கி எழுந்திருக்க வேண்டும். எனவே முதல் 2 முறை அனைவரும் பத்திரமாக முங்கி எழுந்துவிட்டனர். ஆனால் 3-வது முறை மூழ்கையில், அதில் இருந்த ஒரு இளம் அர்ச்சகரின் கால் சேற்றில் சிக்கிக்கொண்டது. இதனால் அவர் கூச்சலிடவே அவரை காப்பாற்ற சக அர்ச்சகர்களும், பொதுமக்களும் சென்றனர். அப்போது அவர்கள் ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது.

இதனால் காப்பாற்ற சென்றவர்கள் உட்பட 5 பேர் நீரில் மூழ்கினர். இதனை கண்ட அங்கிருந்தவர்கள் உடனடியாக தீயணைப்புதுறைக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள் நீரில் மூழ்கிய அனைவரது உடல்களையும் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். பின்னர் சோதித்தபோது, அவர்கள் 5 பெரும் பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்தது.

பின்னர் அவர்கள் சடலங்களை உடற் கூறாய்வுக்காக குரோம்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து சம்பவம் அறிந்து நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறை உயர் அதிகாரிகள் நிகழ்விடத்திற்கு வந்து கோயில் நிர்வாகிகளிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதோடு சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா, தெற்கு இணை ஆணையர் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

இதுகுறித்து விசாரிக்கையில் உயிரிழந்தவர்கள் சூர்யா (22), பானேஷ் (22), ராகவன் (22), யோகேஸ்வரன் (21) மற்றும் ராகவன் (18) ஆகியோர் என்று தெரியவந்தது. இவர்களில் சிலர் வேலை பார்த்து வருகின்றனர்; மற்றவர்கள் கல்லூரி படித்து வருகின்றனர்.

அதோடு அமைச்சர் தா.மோ.அன்பரசன் உயிரிழந்த குடும்பத்தாருக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நங்கநல்லூர் தர்மலிங்கேஸ்வரர் கோயில் தீர்த்தவாரியின் போது குளத்தில் மூழ்கி 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த அனைவரும் சிறிய வயதுடையவர்கள்; எல்லாரும் நல்ல படித்தவர்கள். திடீரென நடந்த இந்த சமவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. பாதுகாப்பு ஏற்பாடு குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்.

சட்டசபை நடந்து கொண்டிருந்தபோதே தகவல் வந்தது. உடனடியாக முதல்வர் நேரில் சென்று ஆறுதல் கூற அறிவுறுத்தினார். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு நானும், மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி மேயர் உள்ளிட்டோர் வந்து குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளோம். குளத்தில் மூழ்கி உயிரிழந்த ஐந்து பேர் குடும்பத்திற்கும் முதலமைச்சர் நிச்சயம் உதவி செய்வார்." என்று கூறினார்

இந்த நிலையில் தற்போது குளத்தில் மூழ்கி உயிரிழந்த 5 பேரின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்ததோடு, தலா ரூ.2 லட்சம் அறிவித்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இது குறித்து வெளியான செய்தி குறிப்பில், "செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் வட்டம், மூவரசம்பட்டு கிராமத்தில் உள்ள தர்மலிங்கேசுவரர் கோயில் தெப்பக்குளத்தில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, தீர்த்தவாரி நிகழ்ச்சிக்காக இன்று காலை 9.30 மணியளவில், கோயில் அர்ச்சகர்களும், அப்பகுதி மக்களும் நீரில் இறங்கியபோது, எதிர்பாராதவிதமாக குளத்தில் மூழ்கி, சூர்யா (வயது-22), பானேஷ் (வயது-22), ராகவன் (வயது-22), யோகேஸ்வரன் (வயது-21) மற்றும் ராகவன் (வயது-18) ஆகிய ஐந்து பேர் உயிரிழந்தனர் என்ற செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, தலா 2 இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்." என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இளம் வயதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளது அனைவர் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Also Read: அரிசி திருடியதாக கேரள பழங்குடி இளைஞர் கொலை.. - நாட்டை உலுக்கிய சம்பவத்தில் 5 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு!