Tamilnadu

குடும்பங்களுக்கு இணைய வசதி.. 13 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் மனோ தங்கராஜ்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023 -2024-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மார்ச் 20 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் அடுத்த நாள் வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து நிதிநிலை அறிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை மீதான மானியக் கோரிக்கை நடைபெற்றது. இதில் அமைச்சர் மனோ தங்கராஜ் 13 புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இதன் விவரம் வருமாறு:-

1. சோழிங்கநல்லூரில் எல்கோசெஸ் இல் உலகத்தரம் வாய்ந்த பசுமைப் பூங்கா ரூ.20 கோடி செலவில் அமைக்கப்படும்.

2. எல்காட் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்களை பசுமை தகவல் தொழில் நுட்பப் பூங்காக்களாக சர்வதேச தரத்தில் ரூ.40 கோடி செலவில் மேம்படுத்தப்படும்.

3. அசைவூட்டம் (Animation), காட்சி வெளிப்பாடு (Visual Effects), வேடிக்கையான விளையாட்டு (Gaming & Comics) (AVGC) மற்றும் விரிவாக்கப்பட்ட மெய்நிகர் (Extended Reality -ER) கொள்கையைத் தமிழ்நாடு அரசு வெளியிடும்.

4. பொதுமக்களுக்கு அரசின் சேவைகளை உயர்ந்த தரத்துடன் வழங்கும் வகையில் இடைமுகப் பயன்பாட்டு நிரலி நுழைவாயில் (API Gateway) உருவாக்கப்படும்.

5. தமிழ்நாடு நலத்திட்டப் பயனாளிகளுக்காக நேரடிப் பயன் பரிமாற்றத்தளம் (TamilNadu DBT Platform) ரூ.1.72 கோடி செலவில் உருவாக்கப்படும்.

6. தமிழ்நாடு இணையவழி அரசு சேவைகளுக்காக ஒற்றை நுழைவுத் திட்டம் ரூ.11 கோடி செலவில் அமல்படுத்தப்படும்.

7. தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு அமைப்பு (TamilNadu AI Mission) உருவாக்கப்படும்.

8.100 புதிய சேவைகளை இ-சேவை மற்றும் மக்கள் சேவை தளத்தில் வழங்கப்படும்.

9. மாநிலம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களுக்கு அதிவேக இணைய இணைப்பு ரூ.184 கோடி செலவில் வழங்கப்படும்.

10. மாநிலத்தில் உள்ள குடும்பங்களுக்கு குறைந்த விலையில், நம்பகமாக அதிவேக இணைய சேவைகள் ரூ.100 கோடி செலவில் வழங்கப்படும்.

11. தமிழ்நாடு தொழில்நுட்ப மையம் பிற நகரங்களுக்கு விரிவாக்கம் செய்யப்படும்.

12. ஆசிரியர்களுக்கான பயிற்சியளிக்கும் நோக்கில் ESDM ,AVGC & IT துறைகளுக்காக சீர்மிகு மையம் நிறுவப்படும்.

13. தமிழ்நாடு அரசு 2020 ஆண்டில் வெளியிடப்பட்ட இணையப் பாதுகாப்பு கொள்ளை புதுப்பிக்கப்படும்.

Also Read: ”காவிரி - குண்டாறு இணைப்பு திட்டம் நடந்தே தீரும்” .. பேரவையில் அமைச்சர் துரைமுருகன் உறுதி!