Tamilnadu
நண்பரை துப்பாக்கியால் சுட்ட இந்து முன்னணி நிர்வாகி கைது.. பறிமுதல் செய்யப்பட்ட தோட்டாக்களால் பரபரப்பு !
கோவை மாவட்டம் புலியகுளம் மசால் லே-அவுட் பகுதியைச் சேர்ந்தவர் அயோத்தி ரவி என்கிற ரவிச்சந்திரன் (45). இவர் அம்மாவட்ட இந்து முன்னணி அமைப்பின் துணைத் தலைவராகவும் இருந்து வருகிறார். இந்த சூழலில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இவர் தனது மகளின் பிறந்தநாளை நண்பர்கள் உறவினரோடு கொண்டாடியுள்ளார்.
அப்போது அவரது நெருங்கிய நண்பராக இருக்கும் தீபக் என்பவரை தனியாக அழைத்து தான் இரகசியமாக வைத்திருந்த துப்பாக்கியை காட்டியுள்ளார். அதோடு அதனை சுட்டும் காட்டியுள்ளார். இதில் எதிர்பாராத விதமாக தீபக்கின் இடது கால் தொடையில் துப்பாக்கியின் குண்டு பாய்ந்துள்ளது. இதில் பலத்த காயமடைந்த தீபக்கை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கே இவருக்கு ஏற்பட்ட காயம் குறித்து மருத்துவர்கள் கேட்கையில், காட்டு பன்றி வேட்டையின் போது தவறுதலாக நாட்டு துப்பாக்கி குண்டு பாய்ந்துவிட்டதாக ரவி தெரிவித்தார். இருப்பினும் சந்தேகத்தின்பேரில் மருத்துவர்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள் விசாரணை மேற்கொண்டனர்.
எனவே அயோத்தி ரவி வீட்டிலும் சோதனை நடத்தினர். அப்போது அவரது வீட்டில் 2 கைத்துப்பாக்கிகள் மற்றும் 5 தோட்டாக்களை கைப்பற்றினர். அவரிடம் இதுகுறித்து கேட்டபோது, அது உரிய அனுமதியின்றி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த அதிகாரிகள், அவரது வீட்டில் இருந்த துப்பாக்கிகளையும் பறிமுதல் செய்து இது குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.
அப்போது ரவி, கட்டப்பஞ்சாயத்துகளில் ஈடுபட்டு வந்ததும், அதற்காக துப்பாக்கியை பயன்படுத்தி வந்ததும் தெரிய வந்தது. மேலும் அவர் வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 2 கை துப்பாக்கிகளையும் சென்னையில் உள்ள அவரது நண்பர்கள் மூலம் வாங்கப்பட்டதும், எந்தவித அனுமதியும் பெறாமல் மிரட்டலுக்காக இந்த துப்பாக்கிகளை பயன்படுத்தி வந்ததும் அம்பலமானது.
இதையடுத்து அவரை இராமநாதபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று சென்னையில் யாரிடமிருந்து துப்பாக்கிகள் வாங்கப்பட்டது? வேறு ஏதேனும் கும்பலுடன் ரவிக்கு தொடர்பு உள்ளதா? என பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பாக கட்டப்பஞ்சாயத்து ஒன்றில் ரவி துப்பாக்கியால் சுட்டு ஒருவர் காயமடைந்ததாகவும், ரகசியமாக மருத்துவரிடம் சிகிச்சை பெற்றதாகவும் கூறப்படுகிறது. காயமடைந்த நபர் யார்? சிகிச்சை அளித்த மருத்துவர் யார்? என்பது குறித்து தனிப்படை போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்து முன்னனி நிர்வாகியின் வீட்டில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“கைதுக்கு பயமில்லை... எதுவானாலும் நேருக்கு நேர் சந்திப்பேன்” – கெத்தாக பேட்டியளித்த உதயநிதி ஸ்டாலின்!
-
உதயநிதி ஸ்டாலின் கைது கண்டனத்திற்குரியது.. தவெக அரசு அராஜகம் - அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்!
-
“காவிரி பிரச்சினையை திசை திருப்ப... உதயநிதியை கைது செய்து அராஜகம்!” : மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!
-
தமிழ்நாடு முழுவதும் கொந்தளிப்பு : வரம்பு மீறிய காவல்துறை... நீதிமன்றத்தில் உதயநிதி தரப்பு வாதம்!
-
வீழ்ந்த சர்வாதிகாரம்.. “உதயநிதி ஸ்டாலினை இன்றே விடுவிக்க வேண்டும்”: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!