Tamilnadu

சுடுகாட்டில் திருமண நாள் கொண்டாட்டம்.. ஆச்சரிய காரணம் சொல்லும் தம்பதி: என்ன அது?

பொதுவாகத் தம்பதிகள் தங்களது திருமணநாளைப் பெரிய உணவகங்களுக்குச் சென்று கொண்டாடுவார்கள். சிலர் தங்களது நண்பர்களை வீட்டிற்கு அழைத்து விருந்து வைப்பார்கள். இன்னும் சிலர் முதியோர், குழந்தைகள் இல்லத்திற்குச் சென்று அவர்களுக்கு உணவுகளை வாங்கி கொடுத்து தங்களது திருமண நாளை கொண்டாடுவார்கள்.

இந்நிலையில் புதுக்கோட்டையைச் சேர்ந்த தம்பதி சுடுகாட்டில் தங்களது திருமண நாளை கொண்டாடிய சம்பவம் பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் களபம் பகுதியைச் சேர்ந்தவர் இளவரசன். நாட்டுப்புற கலைஞராக உள்ளார். இவரது மனைவி வாசுகி. இந்த தம்பதி தங்களது 11வது திருமண நாளை சுடுகாட்டில் கொண்டாட முடிவு செய்துள்ளனர்.

இதற்குக் காரணம், இவர்களது திருமணம் நடக்கும் போது, உறவினர்கள், கிராம மக்கள் என பலரும் இருந்தனர். ஆனால் தற்போது இதில் பலரும் இறந்து விட்டனர். இதனால் திருமண நாளில் சமாதிக்கு சென்று அஞ்சலி செலித்தி, அவர்களது வாழ்த்து பெற வேண்டும் என முடிவு செய்துள்ளனர்.

அதன்படி சுடுகாட்டிற்குச் சென்ற இவர்கள் ஒவ்வொரு சமாதியிலும் பழங்களை வைத்து அஞ்சலி செலுத்தினர். மேலும் தற்போது கோடைக்காலம் என்பதால் பறவைகள் தண்ணீர் கிடைப்பது கஷ்டம். இதனால் பழங்கள், தானியங்களை பறவைகளுக்காகச் சமாதியில் வைத்துள்ளனர்.

பறவைகள் உள்ளிட்ட எல்லோரும் எங்களை வாழ்த்த வேண்டும் என்பதற்காகவே சுடுகாட்டில் திருமணநாளைக் கொண்டாடியதாகத் தம்பதிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

Also Read: நள்ளிரவு 12 மணி.. சுடுகாட்டில் பிறந்தநாள் கொண்டாடிய நபர்: பிரியாணி விருந்து - ஆச்சரிய காரணம்!