Tamilnadu

சென்னை: தோழி வீட்டு நிகழ்ச்சியில் நடனமாடிய இளைஞர்.. சரிந்து விழுந்து உயிரிழப்பு.. சோகத்தில் குடும்பம் !

அண்மைக்காலமாக இளைஞர்கள் திடீரென்று சுருண்டு விழுந்து உயிரிழந்து வருகின்றனர். அதிலும் பெரும்பாலும் நடனமாடிக்கொண்டிருக்கும்போது சுருண்டு விழுந்து பலியாகி வருகின்றனர். இது ஆரம்பத்தில் மற்ற மாநிலங்களில் நடந்த நிகழ்வாக கருதப்பட்டாலும், தற்போது தமிழ்நாட்டிலும் இளைஞர் ஒருவர் நடனமாடும்போது சுருண்டு விழுந்து உயிரிழந்துள்ளார்.

ஆந்திராவை சேர்ந்தவர் சத்யசாய் ரெட்டி (21). இவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரி படித்து வந்தார். இந்த சூழலில் இவரது உடன்படிக்கும் தோழியின் சகோதரிக்கு திருமண நிகழ்ச்சி சென்னை கோயம்பேட்டில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் நடைபெற்றது. இதில் நேற்று மாலை நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் சத்யசாய் ரெட்டியும் கலந்துகொண்டார்.

நேற்று நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் இசைக்கச்சேரி நடந்துள்ளது. அப்போது ஒலித்த சினிமா பாடலுக்கு அனைவரும் நடனமாடியுள்ளனர். எனவே சத்தியசாய் ரெட்டியும் தனது சக நண்பர்களுடன் சேர்ந்து உற்சாகமாக நடனமாடியுள்ளார். அவர் நடனமாடி கொண்டிருந்தபோதே திடீரென மயங்கி கீழே சட்டென்று விழுந்துள்ளார்.

இதனை கண்டு பதறிப்போன நண்பர்கள், திருமண வீட்டார் அவருக்கு முதலுதவி செய்ய முயன்றனர். ஆனால் அது பலனளிக்கவில்லை என்பதால், அவரை மீட்டு உடனடியாக திருமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொண்டு சென்றனர்.

அங்கே சத்தியசாயை பரிசோதித்த மருத்துவர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதை கேட்டு அவரது நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து இதுகுறித்து கோயம்பேடு காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலிசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது உயிரிழந்த இளைஞருக்கு ஏற்கனவே வலிப்பு நோய் இருந்ததாகவும் அதன் காரணமாக மாணவர் நடனமாடிய போது மயங்கி விழுந்து இறந்துள்ளதாகவும் போலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இளைஞரின் உடல் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட பீகாரில் DJ சத்தம் காரணமாகத் திருமண மேடையிலேயே மாரடைப்பு ஏற்பட்டு மணமகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. அதோடு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மகாராஷ்டிராவில் நவராத்திரி கொண்டாட்டத்தில் நடனமாடிய மகன் உயிரிழந்ததைப் பார்த்து அவரது தந்தையும் அதிர்ச்சியில் உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: 3 நாளில் 2 பேர்.. திருச்சியில் மேலும் ஒருவர் தற்கொலை: ஆன்லைன் ரம்மி விளையாட்டால் தொடரும் சோகம்!