Tamilnadu

மாணவர்களுக்கு Snacks.. 'மக்களைத் தேடி மேயர்': சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் இடம் பெற்ற 10 சிறப்புகள் இதோ!

சென்னையில் 2016ம் ஆண்டுக்கு பிறகு மேயர் தேர்தல் நடைபெறாமல் இருந்ததால் ஆறு ஆண்டுகளாக ஆணையர் மற்றும் துணை ஆணையர்கள் மாநகராட்சி பட்ஜெட்டை வெளியிட்டு வந்தனர். பின்னர் கடந்த ஆண்டு உள்ளாட்சி தேர்தல் முடிந்த பிறகு சென்னை மாநகராட்சி மேயராக ஆர். பிரியா மேயராக பதவி ஏற்றுக்கொண்டார். இதையடுத்து 2022-23ம் ஆண்டிற்காக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சியின் 2023 -2024ம் ஆண்டுக்கான நிதிலை அறிக்கையை இரண்டாவது முறையாக மேயர் பிரியா இன்று தாக்கல் செய்தானர்.

இந்த நிதிநிலை அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள் சிலவற்றைப் பார்ப்போம்:-

மாலை நேர சிறப்பு வகுப்பு மற்றும் குறைதீர் கற்பித்தல் வகுப்பில் (Remedial Class) பங்கேற்கும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மாலையில் சிறு தீனி அவித்த சுண்டல் அல்லது பயிறு வகைகள்) ரூ.100 இலட்சம் செலவில் வழங்கப்படும். அனைத்து சென்னை மாநகராட்சி பள்ளிகளிலும் தானியங்கி மணி ரூ.27.17 இலட்சம் மதிப்பீட்டில் அமைத்து தரப்படும்.

10 மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள ஆய்வகங்கள் ரூ.2 கோடியில் மேம்படுத்தப்படும். மாணவர்களுக்கு ஆலோசனைகள் வழங்க அனைத்து மண்டலங்களிலும் ஆலோசகர்கள் (Counsellors) ஒரு கல்வியாண்டிற்கு ரூ.30 இலட்சம் செலவில் பணியமர்த்தப்படுவார்கள்.

பன்னாட்டு கலாச்சாரங்கள், கல்விமுறை, சுற்றுச்சூழல் ஆகியவற்றைப் பற்றி நமது மாணவர்களுக்கு கற்பிப்பதற்கு பள்ளிகளில் மாதிரி ஐக்கிய நாடு (MUN) குழு அமைக்கப்படும்.

திருக்குறளுடன் அதற்கான விளக்கமும் நாள்தோறும் காலை இறைவணக்கக் கூட்டத்தில் மாணவர்களை கூறவைத்து தமிழ் பேசும் திறனை மேம்படுத்தப்படும்.

10 மற்றும் 12-ஆம் வகுப்புகளில் 100% தேர்ச்சி ஏற்படுத்தும் ஆசிரியர்களுக்கு ஊக்கத்தொகை ரூ.3,000 உயர்த்தி வழங்கப்படும்.

மாநகராட்சி பள்ளியில் பயின்று JEE,CLAT,NIFT,NEET போட்டி தேர்வில் வெற்றி பெற்று IIT போன்ற நிறுவனங்களில் சேரும் மாணவர்களுக்கு முதலாம் ஆண்டு கல்வி கட்டணத்தை மாநகராட்சி செலுத்தும்.

மாணவர்கள் மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு வரவும், நாள் முழுவதும் மகிழ்ச்சியான மனநிலையில் இருக்கவும், முதல் பாட வேலையின் போது 10 நிமிடம் தினமும் மகிழ்ச்சியான வகுப்புகள் (Happy Class) நடத்தப்படும்.

11ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் தொழிற்சாலைகளை பார்வையிடுவதற்கு ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள்.

சுகாதாரத் துறையின் கீழ் பணிபுரியும் NULM தற்காலிக தொழிலாளர்களுக்கு நலப்பொருட்களும், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மழைக்கவச உடை (Raincoat) மற்றும் பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்படும்.

கொசு ஒழிப்பு மற்றும் கொசுப்புழு தடுப்புப் பணிகளைச் செய்யும் அனைத்துத் தொழிலாளர்களுக்கும், ரூ.35 இலட்சம் மதிப்பீட்டில் தரமான Vector Control Kit கொள்முதல் செய்து வழங்கப்படும்.

சென்னை மாநகரில் சுற்றித் திரியும் நாய்களை பிடிப்பதற்கு 6 புதிய வாகனங்கள், ரூ.60 இலட்சம் மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்படும். சுற்றித் திரியும் மாடுகளை பிடிப்பதற்கு 5 புதிய வாகனங்கள், ரூ.1.35 கோடி மதிப்பீட்டிலும் கொள்முதல் செய்யப்பட்டு உபயோகத்திற்கு கொண்டு வரப்படும்.

சென்னை மாநகராட்சி சோதனை அடிப்படையில் “மஞ்சப்பை” வழங்கும் திட்டம், சுயஉதவி குழுக்களுடன் இணைந்து செயல்படுத்தப்படும். தூய்மை பணியாளர்களுக்கு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ரவில் ஒளிரும் புதிய வடிவமைப்புடன் கூடிய சீருடைகள் வழங்கப்படும்.

கைவிடப்பட்ட வாகனங்களை அப்புறப்படுத்தும் பணியும் வாகன போக்குவரத்தினை மேம்படுத்த ஏதுவாக தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

மக்களின் குறைகளை கண்டறிந்து அவற்றை தீர்வுகாணும் வகையில் "மக்களைத் தேடி மேயர்" என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: மெரினா கடற்கரையில் கல்விக் கட்டணத்திற்காக வயலின் வாசித்த மாணவர்.. உடனே உதவி செய்த சென்னை போலிஸ்!