Tamilnadu

நியூயார்க் TO சிங்கப்பூர்.. பறந்து கொண்டிருந்த விமானம் திடீரென சென்னையில் தரையிறக்கம்.. காரணம் என்ன ?

அமெரிக்கா நாட்டின் நியூயார்க் நகரில் இருந்து, சிங்கப்பூர் செல்லும், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், இன்று அதிகாலை 318 பயணிகளுடன் நியூயார்க்கில் இருந்து புறப்பட்டு சிங்கப்பூர் நோக்கி சென்று கொண்டு இருந்தது. இந்த விமானம் நடு வானில் பறந்து கொண்டிருந்தபோது, விமானத்தில் பயணித்த அமெரிக்க நாட்டைச் சேர்ந்த கென்னடி என்ற பயணிக்கு, திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் அந்தப் பயணி வலியால் விமானத்துக்குள் துடித்துக் கொண்டு இருந்தார். விமான பணிப்பெண்கள் அவருக்கு அவசரமாக முதலுதவி சிகிச்சை அளித்ததோடு, விமானிக்கும் அவசரமாக தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து விமானி விமானத்தை அவசரமாக தரையிறக்கி, பயணிக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க முடிவு செய்தார். அப்போது விமானம் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் வழியாக சென்று கொண்டு இருந்தது. ஆனால் விமானி அருகே உள்ள தமிழ்நாட்டில், சென்னையில் தரை இறக்கினால் மருத்துவ சிகிச்சைக்கு வசதியாக இருக்கும் என நினைத்தார். இதையடுத்து விமானி அவசரமாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்டு, மருத்துவ காரணத்துக்காக விமானம் அவசரமாக தரையிறங்க அனுமதி கேட்டார்.

உடனடியாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், டெல்லியில் உள்ள தலைமை கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு, தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சிங்கப்பூர் விமானத்தை, உடனடியாக சென்னையில் தரையிறங்க அனுமதிப்பதோடு, பயணிக்கான மருத்துவ வசதிகளையும் செய்து கொடுக்கும்படி அறிவுறுத்தினர்.

பின்னர் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னையில் அவசரமாக தரையிறங்கியது. உடனடியாக சென்னை விமான நிலைய மருத்துவக் குழுவினர் விமானத்துக்குள் ஏறி, அமெரிக்க பயணி கென்னடியை பரிசோதித்தனர். அவருக்கு கடுமையான மாரடைப்பு ஏற்பட்டுள்ளதால், உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெறவேண்டும் என்று தெரிவித்தனர். உடனே சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் பயணி கென்னடிக்கு அவசர கால மருத்துவ விசா வழங்கினர்.

எனவே பயணி கென்னடி விமானத்திலிருந்து கீழே இறக்கப்பட்டு, ஆம்புலன்ஸ் மூலம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அதன்பின்பு அமெரிக்க பயணி கென்னடி, மருத்துவ சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பது குறித்து விமான நிறுவன அதிகாரிகள், சென்னையில் உள்ள அமெரிக்க நாட்டு தூதரகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், 317 பயணிகளுடன் சுமார் 4 மணி நேரம் தாமதமாக, சென்னையில் இருந்து சிங்கப்பூர் புறப்பட்டு சென்றது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள அமெரிக்க பயணி, உடல்நிலை தேறி முழு ஆரோக்கியமாக இருப்பதாக, சென்னை விமான நிலைய அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

Also Read: பள்ளியில் கண்டறியப்பட்ட ஆணுறை, மதுபானம், படுக்கைகள்.. பாஜக ஆளும் மாநிலத்தின் மற்றொரு அவலநிலை !