Tamilnadu

திருமணம் நடந்து 3 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை.. ஏக்கத்தில் விபரீத முடிவெடுத்த மருத்துவர்!

திருப்பூர் மாவட்டம், வேலாயுதம் பாளையத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்தார்.

இவரது மனைவி சந்தியா. இந்த தம்பதிக்குக் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்கள் சத்தியமங்கலத்தில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு சந்தியா வெளியூருக்குச் சென்றுள்ளார். இதையடுத்து நேற்று கணவன் சதீஷ்குமாருக்கு போன் செய்துள்ளார். ஆனால் அவரது செல்போன் சுவிட்ச் ஆப் என வந்துள்ளது.

இதனால் வீட்டின் அருகே இருப்பவர்களுக்குத் தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து அவர்கள் சதீஷ்குமாரின் வீட்டிற்குச் சென்று பார்த்தபோது அவர் தூக்கிட்ட நிலையில் சடலமாக இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இது பற்றி தகவல் அறிந்து வந்த போலிஸார் சதீஷ் குமார் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக விசாரணைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

முதற்கட்ட விசாரணையில், திருமணம் நடந்து 3 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாத ஏக்கத்தில் சதீஷ் குமார் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. இருப்பினும் வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்பது குறித்தும் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: “ரியல் எஸ்டேட் அதிபருக்கு டார்கெட்.. 5½ பவுன் தங்கம், 2 லட்சம் பணம் பறித்த பெண்கள் கைது” : போலிஸ் அதிரடி!