Tamilnadu

மக்களே உஷார்.. “செல்போனுக்கு வந்த Online SMS - ஒரே கிளிக்கில் மொத்த பணமும் அபேஸ்” : பகீர் சம்பவம்!

சென்னை வானகரம் சக்தி நகரைச் சேர்ந்தவர் ரகுராம் (40). இவர் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் கம்பனியில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் இவரது செல்போனுக்கு ஒரு குறுந்தகவல் வந்துள்ளது.

உடனே அவரது நம்பருக்கு வித்தியாசமான எண்ணில் இருந்து அழைப்பு வந்துள்ளது. அப்போது எதிரே பேசிய நபர் குஜராத் மாநிலத்தில் உள்ள தனியார் வங்கியின் மேலாளர் என்று சொல்லி, உங்களுக்கு வந்த லிங்க்கை பயன்படுத்துங்கள் பாருங்கள் என்று அதன் மூலம் அதிக அளவில் பணம் சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

இதனை நம்பிய ரகுராம் அந்த லிங்க்கை பயன்படுத்தியுள்ளார். ஆனால், அலைபேசியில் தெரிவித்ததை போல் பணம் சம்பாதிப்பதற்கு பதிலாக சிறிது நேரத்தில் அவரது வங்கி கணக்கில் இருந்து 5 லட்சம் தீடீர் என்று மாயமானதை கண்டு கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் உடனே இது குறித்து ரகுராம் அரும்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

ஆன்லைன் மோசடி என்பதால் இந்த வழக்கு தொடர்பாக அண்ணாநகர் சைபர் க்ரைம் போலிஸாரிடம் புகார் அளிக்க தெரிவித்துள்ளனர. இதனைத் தொடர்ந்து ரகுராம் அளித்த புகாரின் பேரில் அண்ணா நகர் சைபர் க்ரைம் போலிஸார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

இதுகுறித்து அண்ணாநகர் சைபர் க்ரைம் போலிஸார் ஆன்லைன் வாயிலாக செல்போன் மூலம் எந்த ஒரு குறுந்தகவல் வந்தாலும் அதில் ஒரு லிங்க்கை பயன்படுத்தக் கூடாது என்று பலமுறை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு செய்துவருகிறோம்.

அதேபோல் குஜராத் மாநிலத்தில் இருந்து வங்கியின் மேலாளர் பேசுவதுபோல் பேசி பண ஆசை வார்த்தை தூண்டி லிங்க்கை தொடுவதற்கு நைசாக பேசுவார்கள் ஆனால் நீங்க கவனமாக இருக்க வேண்டும் என விழிப்புணர்வு செய்துவருகிறோம். அப்படி இருந்தும் சில பேர் ஆன்லைன் வாயிலாக வரும் லிங்க்கை பயன்படுத்தினால் அவர்களது வங்கி கணக்கில் இருந்து பணம் காணாமல் போய்விடுகிறது. எனவே ஆன்லைன் வாயிலாக வரும் குறுந்தகவல் மற்றும் லிங்க்கை பயன்படுத்த வேண்டாம் என தெரிவித்துள்ளனர்.

Also Read: “இப்படியெல்லாமா ஏமாறுவாங்க?” - வெளி நாட்டினரிடம் பணம் பறித்த மர்ம கும்பல்.. போலிஸிடம் சிக்கியது எப்படி ?