Tamilnadu

காலை உணவு திட்டத்திற்கு ரூ.500 கோடி : பள்ளிக் கல்வித் துறையில் இடம் பெற்றுள்ள 5 முக்கிய அறிவிப்புகள்!

தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த ஜனவரி 9ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. பின்னர் ஆளுநர் உரை மீது விவாதம் நடைபெற்றது. இதையடுத்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரைநிகழ்த்தினார். பின்னர் அந்தக் கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழ்நாடு அரசின் 2023-2024ம் நிதி ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கைக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. மின்னணு வடிவிலான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து வாசித்து வருகிறார். அதன் விவரம் வருமாறு:-

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கடந்த இரண்டு ஆண்டுகளில் கணிசமாக உயர்ந்துள்ளது. பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தை' அரசு தொடங்கியுள்ளது. புதிய வகுப்பறைகள், ஆய்வகங்கள், கழிப்பறைகள் என மொத்தம் 1,500 கோடி ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

'எண்ணும் எழுத்தும் திட்டமானது 2025 ஆம் ஆண்டுக்குள் ஒன்று முதல் மூன்றாம் வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் அனைவரும் அடிப்படை கல்வியறிவும் எண்கணிதத் திறனும் அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

ரூ.10 கோடி நிதியுடன் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் புத்தகத் திருவிழாக்க நடந்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். இந்த சர்வதேச புத்தகக் கண்காட்சி வரும் ஆண்டிலும் நடத்தப்படும்.

மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை உரிய நேரத்தில் நேரடிப் பணப்பரிமாற்ற முறையில், அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படுவதை உறுதி செய்யும் வகையில் ஒருங்கிணைந்த கல்வி உதவித்தொகை இணையதளம் ஒன்று உருவாக்கப்படும்.

மதுரையில் இரண்டு இலட்சம் சதுர அடி பரப்பளவில் எட்டு தளங்களுடன் நவீன வசதிகளைக் கொண்ட மாபெரும் நூலகம் ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது.

முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கத்திற்கு ரூ. 500 கோடி ஒதுக்கீடு. 18 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள். அரசு அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.

ஆதிதிராவிடர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை, இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை, வனத்துறை போன்ற பல்வேறு துறைகளில் கீழ் செயல்படும் அனைத்து பள்ளிகளும் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் கொண்டு வரப்படும். பள்ளிக்கல்வித் துறைக்காக ரூ.40.299 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Also Read: தமிழ்நாடு அரசின் 2023- 24ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை: பேரவையில் தாக்கல் செய்து வரும் நிதியமைச்சர் PTR!