Tamilnadu

விருந்துக்கு அழைத்து தம்பதி வீட்டில் 35 சவரன் நகை கொள்ளை: ஓராண்டுக்கு பின் உறவினர் சிக்கியது எப்படி?

சென்னை மயிலாப்பூர் அப்பா சுவாமி கோவில் தெருவைச் சேர்ந்தவர் நரேந்திரன். இவர் சென்னையில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவருக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடந்தது.

இதையடுத்து இவரின் நெருங்கிய உறவினரான கே.கே நகர் பகுதியைச் சேர்ந்த வனிதா என்பவர் புதிய தம்பதிகளை வீட்டிற்கு விருந்திற்காக அழைத்துள்ளார். பின்னர் தம்பதிகள் விருந்து முடித்து வீட்டிற்குக் சென்று பீரோவைத் திறந்து பார்த்தபோது, இதில் திருமணத்திற்காக வாங்கிய நகைகள் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மேலும் பூட்டிய வீட்டிலிருந்த நகையை யார் திருடியிருப்பார்கள் என தம்பதிகள் குழப்பமடைந்தனர். இதையடுத்து பக்கத்து வீட்டிலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது உறவினர் வனிதாவின் கணவர் சுரேஷ், வீட்டிற்கு வந்து செல்லும் காட்சிகள் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த நரேந்திரன் இது குறித்து மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் நரேந்திரனின் உறவினரான வனிதாவிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இதில் நரேந்திரன் விருந்திற்காக வந்தபோது, வனிதாவின் கணவர் சுரேஷ், நரேந்திரனின் வீட்டுச் சாவியை அவருக்குத் தெரியாமல் எடுத்துச் சென்று அவரது வீட்டிற்கு சென்று பீரோவில் இருந்த 35 சவரன் நகைகளைக் கொள்ளையடித்தது தலைமறைவானது தெரியவந்தது.

இதையடுத்து கடந்த ஓராண்டாகத் தலைமறைவாக இருந்த சுரேஷை போலிஸார் தேடிவந்தனர். இந்நிலையில் அவரது செல்போன் எண்ணை ஆய்வு செய்தபோது அவர் கோயம்புத்தூரில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.

பின்னர் கோயம்புத்தூர் விரைந்த மயிலாப்பூர் தனிப்படை காவல் துறையினர் ஓராண்டுக் காலமாகத் தலைமறைவாக இருந்த சுரேஷை கைது செய்து அவரிடம் இருந்த 35 சவரன் நகைகளை மீட்டனர்.

Also Read: 5 மாத கர்ப்பிணியை பாலியல் வன்கொடுமை செய்த கணவர்.. வீடியோ எடுத்த மனைவி.. ஒடிசாவில் அதிர்ச்சி !