Tamilnadu
ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை திருப்பி அனுப்பிய விவகாரம்: இன்று மாலை முதலமைச்சர் தலைமையில் அமைச்சரவை கூட்டம்!
ஆன்லைன் ரம்மிக்கு தடை விதித்து சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை தமிழக அரசிடமே திருப்பி அனுப்பினார், ஆளுநர் ஆர்.என்.ரவி. இந்த விவகாரம் தொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.
முன்னதாக ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வது மற்றும் ஆன்லைன் விளையாட்டுக்களை முறைப்படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்ய, ஒய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் தமிழ்நாடு அரசால் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு பல்வேறு தரப்பினரின் கருத்துக்களை கேட்டு, ஏற்கெனவே உள்ள விதிகளின்படி அவற்றை கட்டுப்படுத்த இயலாது என்பதால், புதிய சட்டம் இயற்ற பரிந்துரை செய்தது.
இந்தப் பரிந்துரைகள் அடிப்படையில், தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டு ஒழுங்குபடுத்துதல் தொடர்பான அவசர சட்டம் உருவாக்கப்பட்டு, அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது. சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார்.
இதைடுத்து, கடந்த ஆண்டு அக்டோபரில் நடந்த சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில், அவசர சட்டத்துக்கு மாற்றாக, சட்டம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. இதற்கான மசோதாவை சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தாக்கல் செய்தார். அந்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.
பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதா தொடர்பாக, பல்வேறு விளக்கங்களை ஆளுநர் கோரியிருந்தார். அதற்கு, ஒரே நாளில் தமிழக அரசும் விளக்கங்களை அளித்தது. பின்னர் சட்டப் பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டு 5 மாதங்கள் ஆனநிலையில், அதன் மீது ஆளுநர் எந்த முடிவையும் எடுக்காமல் இருந்தார்.
இந்நிலையில், தற்போது ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை தமிழக அரசுக்கு திருப்பியனுப்பியுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில், ஆன்லைன் ரம்மி தடை சட்ட விவகாரம் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
சட்ட மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ள நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சட்டப்பூர்வ நடவடிக்கைகளுக்கான வாய்ப்புகள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.
பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவை திருப்பி அனுப்பியது ஏன் என்பது தொடர்பாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆன்லைன் ரம்மி போன்ற விளையாட்டுகள் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் வருவதால், அவற்றைத் தடை செய்து சட்டமியற்றுவதற்கான அதிகாரம் பேரவைக்கு இல்லை என ஆளுநர் ஆர்.என்.ரவி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
“பாவம், இந்தி பேசும் மக்களை ஏமாற்றலாம்.. ஆனால் தமிழ்நாட்டு மக்களை..” -பாஜகவை வெளுத்து வாங்கிய தயாநிதி MP!
-
உலக மனித உரிமைகள் நாள் : சுயமரியாதையைப் பாதுகாத்திட உறுதி ஏற்போம்! - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
வெல்லும் தமிழ்ப் பெண்கள் : மகளிர் உரிமைத் திட்டத்தின் 2-வது கட்ட விரிவாக்கம்.. எப்போது தொடக்கம்? -விவரம்!
-
4 ஆண்டுகள் - ரூ.8,230.55 கோடி மதிப்பிலான கோயில் சொத்துக்கள் மீட்பு : இந்து சமய அறநிலையத்துறை அதிரடி!
-
மதுரை கோவைக்கு மெட்ரோ ரயில் புறக்கணிப்பு ஏன்? : மாநிலங்களவையில் கேள்வி எழுப்பிய கனிமொழி NVN சோமு MP!